"சித்து" விளையாட்டில் சிக்கிய பாஜக.. கீர்த்தி ஆசாத்தின் மனைவியும் ஆம் ஆத்மிக்குப் போகிறார்!
டெல்லி: நவ்ஜோத் சிங்கைத் தொடர்ந்து அடுத்து இன்னொரு அதிர்ச்சி வைத்தியத்தை பாஜக சந்திக்கவுள்ளது. பாஜகவின் இன்னொரு கிரிக்கெட் எம்.பியான கீர்த்தி ஆசாத்தின் மனைவியும் பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் சேரப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவைச் சேர்ந்தவரான முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து நேற்று கட்சியை விட்டும், ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். இவர் ஆம் ஆத்மியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்துவை பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் பாஜகவுக்கு இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப் போகிறார் இன்னொரு கிரிக்கெட் ஜாம்பவானின் மனைவி. அவர் கீர்த்தி ஆசாத்தின் மனைவி பூனம் ஜா. கீர்த்தி ஆசாத் பாஜக எம்.பி. ஆவார். ஆனால் அவர் கடந்த ஆண்டு கட்சியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவியின் முடிவு குறித்து கீர்த்தி ஆசாத் கூறுகையில், இது எனது மனைவியின் தனிப்பட்ட முடிவு. இது என்னைக் கட்டுப்படுத்தாது என்றார்.
இன்னும் ஓரிரு தினங்களில் சித்துவும், பூனம் ஜாவும் ஆம் ஆத்மியில் இணைவார்கள் என்று தெரிகிறது. இதை ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவிப்பார் என்றும் தெரிகிறது.