லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையை குறிப்பிடாமல் பாஜகவினர் தாக்கப்பட்டதாக 2-வது எப்.ஐ.ஆர். பதிவு!
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தில் போலீசார் 2-வது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் விவசாயிகாள் படுகொலை குறித்து குறிப்பிடாமல் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் டெல்லியைத் தொடர்ந்து ஹரியானா, உ.பி.யில் நடைபெற்று வருகிறது. உ.பி.யில் கடந்த 3-ந் தேதியன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா பங்கேற்ற நிகழ்ச்சி லக்கிம்பூர் அருகே நடைபெற்றது.
லக்கிம்பூர் வன்முறை: மகாராஷ்டிராவில் இன்று பந்த்.. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தும் முடக்கம்
லக்கிம்பூர் படுகொலைகள்
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அப்போது அமைதியாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. இந்த சம்பவங்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அமைச்சர் மகன் கைது
விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்த நிலையில் லக்கிம்பூர் வன்முறைகள் தொடர்பாக அக்டோபர் 4-ந் தேதி போலீசார் 2-வது எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் 2-வது எப்.ஐ.ஆர்.
பாஜகவின் சுமித் ஜெய்ஸ்வால் என்பவர் கொடுத்த புகாரின் அடிபப்டையில் இந்த எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. விவசாயிகளை படுகொலை செய்த காரில் இருந்தவராம் இந்த சுமித் ஜெய்ஸ்வால். அதில், 2 பாஜக தொண்டர்கள், பத்திரிகையாளர் ரமன் காஷ்யப், கார் ஓட்டுநர் ஹரி ஓம் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சமூக விரோதிகளால் இந்த கொலை நடந்தது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது என்பதை போலீசார் குறிப்பிடவில்லை.
எப்.ஐ.ஆர். சொல்வது என்ன?
மேலும் கார் ஓட்டுநர் ஹரி ஓம், வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு மூங்கில் தடிகள், வாள்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்கிறது அந்த எப்.ஐ.ஆர். அதேபோல் சுபம் மிஸ்ரா என்பவரையும் சமூக விரோத கும்பல் பிடித்து தாக்கியதால் கொல்லப்பட்டார் எனவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 2 பாஜக தொண்டர்களும் அந்த சமூக விரோத கும்பலால் கொல்லப்பட்டதாகவும் போலீசாரின் 2-வது எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.