விமர்சனத்தை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்-அவதூறு வழக்கில் ஜெ.வுக்கு சுப்ரீம்கோர்ட் கடும் கண்டனம்
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு எதிரான வழக்கில், பொதுவாழ்க்கையில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்; சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்; அரசு இயந்திரத்தை தமிழக அரசைப் போல எந்த ஒரு அரசும் முறைகேடாக பயன்படுத்தியதே இல்லை என்று சரமாரியாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதா பதிலளிக்க ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அத்துடன் தமிழக அரசு இதுவரை போட்டிருந்த அவதூறு வழக்கு விவரங்களையும் கேட்டிருந்தது. அப்போது தமிழக அரசு எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு போடுவதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. இன்றைய விசாரணையில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்தது.
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கூறியதாவது
- முதல்வர் ஜெயலலிதா பொதுவாழ்க்கையில் இருப்பவர்.... விமர்சனங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
- பொதுவாழ்க்கையில் இருப்பவருக்கு சகிப்புத்தன்மை வேண்டாமா?
- தம் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதற்காக அவதூறு வழக்குகளைப் போடுவதை நிறுத்த வேண்டும்.
- அவதூறு வழக்குகளில் அக்கறை செலுத்துவதற்கு பதிலாக நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- அரசியல் எதிரிகளை பழிவாங்க அவதூறு வழக்குகளுக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்த கூடாது.
- முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிட்டார்கள் என்பதற்காக அவதூறு வழக்குகளைப் போடக் கூடாது.
- தமிழக அரசைப் போல வேறு எந்த ஒரு மாநில அரசும் அரசு இயந்திரத்தை இப்படி அவதூறு வழக்குகளுக்காக பயன்படுத்தியது இல்லை.
இவ்வாறு தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் சாடியது. பின்னர் இந்த வழக்கில் 3 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.