காதலியை கர்ப்பமாக்கிய காதலன் பலாத்கார வழக்கிலிருந்து விடுதலை: டெல்லி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: திருமணம் செய்துகொள்வதாக கூறி உடலுறவு வைத்துக்கொண்டு, திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் தொடர்ந்த பலாத்கார வழக்கை டெல்லி கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. பெண்ணின் சம்மதத்துடன் வைத்துக் கொண்ட உடலுறவை பலாத்காரமாக கருத முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
டெல்லி ராஜ்கோரி பகுதியை tசேர்ந்த ஆண் மீது கடந்த பிப்ரவரி 2ம் தேதி அவரது காதலி என்று சொல்லி ஒரு பெண், காவல் நிலையத்தில் பலாத்கார புகார் கொடுத்தார். அந்த புகாரில், "என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, உடலுறவு வைத்துக் கொண்டார். இருமுறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்புக்கு உட்படுத்தினார். ஆனால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த ஆண் மீது, பலாத்காரம், பெண்ணின் சம்மதம் இன்றி, கருக்கலைப்புக்கு காரணமாக இருந்தது, குற்ற நோக்கம் போன்ற பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட காதலன் அளித்த வாக்குமூலத்தில், இருவரும் உடல் உறவு வைத்திருந்தது உண்மைதான், ஆனால் திருமணம் செய்துகொள்வதாக நான் கூறவில்லை. இருவரும் ஆசைப்பட்டு உறவு வைத்துக்கொண்டோம், அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி வீரேந்தர் பட் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று நீதிபதி தனது தீர்ப்பை வெளியிட்டார். தீர்ப்பிலுள்ள முக்கிய அம்சங்கள்: பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் பழகியதாக கூறியுள்ளார். ஆனால், காதலன் திருமணம் செய்ய வாக்குறுதி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 18 வயது நிரம்பிய ஒரு பெண், தனது விருப்பத்தோடு உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் மட்டுமே கோர்ட் முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த ஆணை பலாத்கார குற்றவாளி என்று எப்படி அறிவிக்க முடியும்?
பெண்ணும் விருப்பப்பட்டு தனது முழு சம்மதத்துடனே அந்த ஆணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். மேலும், இரு குடும்பங்களுக்கும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு இருந்ததால், திருமணம் நடைபெறுமா என்று காதலிக்கும்போதே, சந்தேகம் இருந்ததாக புோலீசில் அந்த பெண் அளித்த வாக்குமூலத்திலும் கூறியுள்ளார். நடைபெறுமா என்று உறுதியில்லாத திருமணத்தை நம்பி, கற்பை பறிகொடுத்ததாக பெண் கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட ஆண், விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications