மராத்தா சமூகத்துக்கான 16% இடஒதுக்கீடு:மும்பை கோர்ட் தடை! முஸ்லிம்களுக்கான 5% ஒதுக்கீட்டுக்கு அனுமதி
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்துக்கு முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் 16% இடஒதுக்கீடு அளித்ததற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி நிறுவனங்களில் 5% இடஒதுக்கீடு தொடர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் வெறும் 6 இடங்களைத்தான் கைப்பற்றியது. இதனால் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்க நேரிடுமோ எனக் கருதி கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தா வகுப்பினருக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கிடு வழங்கிட அவசர சட்டம் பிறப்பித்தது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவானது 73% என அதிகரித்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ 50%க்கும் மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று நிர்ணயித்துள்ளதை சுட்டிக் காட்டி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஊடகவியலாளர் கேதன் டிரோட்கர் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான 16% இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்தது; அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீடு தொடர அனுமதி அளித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.