2.5 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை.. விரைவில் சட்டத் திருத்தம்.. மத்திய அரசு
வெளிநாடுகளில் வசிக்கும் 25 மில்லியன் வாக்காளர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2.5 கோடி பேருக்கு விரைவில் வாக்குரிமை அளிக்கும் ஏதுவாக உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் தொழில்நிமித்தமாக வாழ்ந்து வரும் போதிலும் இந்தியாவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அவர்களில் வெறும் 10,000 முதல் 12,000 வரையிலான இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து வந்து வாக்களிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஏனையவர்கள் பணிச் சுமை காரணமாகவும், விடுப்பு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு வந்து வாக்கு அளிப்பது என்பது இயலாத காரியமாகிவிட்டது.
எனவே அவர்கள் தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வாக்களிப்பது, அவர்கள் சார்பில் அங்கீகாரம் பெற்ற ஒருவர் வாக்களிப்பது என்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் குழுவினர் சட்ட முன் வரைவை ம்ததிய சட்ட அமைச்சத்துக்கு அனுப்பியது.
ஒத்திவைக்கப்பட்டது
எனினும் இந்த விவகாரம் குறித்து கடந்த ஜனவரியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் வி.பி.ஷம்ஷீர் (கேரளம்) மற்றும் லண்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் நாகேந்தர் சிந்தம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
வாக்குரிமை அளிக்க உத்தரவிட கோரிக்கை
அதில், பொதுத் தேர்தலின்போது, என்ஆர்ஐ-கள் இந்திய தூதரகம் மூலமோ, அஞ்சல் மூலமோ, இணையதளம் வழியாகவோ தங்கள் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
தேர்தல் ஆணையம் அறிக்கை
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
மத்திய அரசு உறுதி
இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள 2.5 கோடிக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
12 வார கால அவகாசம்
இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார். இதையடுத்து, இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு 12 வாரம் அவகாசம் வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.