திட்டக் கமிஷனுக்கு மூடு விழா! பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார் பிரதமர் மோடி!!
டெல்லி: "திட்டக் கமிஷன்" என்ற அமைப்புக்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கான யோசனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் கமிஷன் என்ற அமைப்பு முறையை மூடுவதற்கான காலம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இருப்பினும் திட்டக் கமிஷனை மாற்றி அமைப்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இத்திட்டக் கமிஷனுக்கு மாற்றாக 5 சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை தலைவராக கொண்ட இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பொருளாதார வல்லுநர்கள் அரவிந்த் பங்கரியா, பிபேக் டெப்ராய் ஆகியோர் சேர்க்கப்பட இருக்கின்றனர்.
அத்துடன் மேலும் 2 பொருளாதார வல்லுநர்களும் இக்குழுவில் இடம்பெறக் கூடும். இதற்கான முறையான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் அழைப்பு
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒரு அமைப்பு முறை தேவை. இதில் மாநிலங்களின் பங்களிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை பொதுமக்களும் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.