ரொம்ப லேட்டாக அமெரிக்காவின் வாழ்த்துக்கு நன்றி கூறிய மோடி!
டெல்லி: தனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து உலகத் தலைவர்களையும் பெயர் குறிப்பிட்டு நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் சற்று தாமதமாக அவர் நன்றி கூறியுள்ளார்.
மோடிக்கு விசா தராமல் முகத்தில் அடித்த நாடு அமெரிக்கா. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் எடுத்த எடுப்பிலேயே அமெரிக்காவை மோடி ஓரம் கட்ட ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ரஷ்யாவை அவர் தூக்கி வைத்தும் பேச ஆரம்பித்திருக்கிறார். இதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கா ஓரம் கட்டப்பட்டு மீண்டும் ரஷ்யா முதலிடம் பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தனது வெற்றிக்காகவும், பிரதமராக பதவியேற்கவிருப்பதையொட்டியும் வாழ்த்து தெரிவித்திருந்த உலகத் தலைவர்களுக்கு டிவிட்டர் மூலம் நன்றி கூறி செய்தி போட்டுள்ளார் மோடி. அதில், ஜப்பான், ரஷ்யா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதேபோல கனடா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கு மட்டும் நன்றியை உடனடியாக சொல்லவில்லை மோடி. சற்று தாமதமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். கெர்ரி வாழ்த்து தெரிவித்து ஒரு நாளைக்குப் பிறகுதான் மோடி பதில் கொடுத்துள்ளார்.
குஜராத் இனக் கலவரம் தொடர்பாக அமெரிக்கா மட்டுமல்லாமல் பல ஐரோப்பிய நாடுகளும் கூட மோடிக்கு விசா தருவதில் சிக்கலை ஏற்படுத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம். ஆனால் இப்போது மோடி பிரதமராகவுள்ளதால் வேறு வழியில்லாமல் அமெரிக்கா, மோடியை வரவேற்றுள்ளது. அதிபர் ஒபாமா தெரிவித்த வாழ்த்துச் செய்தியிலும் கூட மோடியை அமெரிக்கா வருமாறு அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.