பிரதமராகும் வரை மோடிதான் குஜராத் முதல்வராக நீடிப்பாராம்
டெல்லி: பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்திருந்தாலும் அவர் குஜராத் முதல்வர் பதவியலிருந்து விலக மாட்டார் என்றும் அவரே பதவியில் நீடிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் அவர் குஜராத் முதல்வர் பதவியில் நீடிப்பாரா அல்லது வேறு யாரையாவது அப்பதவிக்கு நியமிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் மோடிக்கு இனிமேல்தான் நிறைய வேலை இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக சுற்றுலா சென்று பிரசாரம் செய்ய வேண்டும். பிரசார உத்திகளை வகுக்க வேண்டும். எனவே அவரால் முதல்வர் பதவியை கவனிக்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.
ஆனால் மோடி முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் கூட குஜராத்தில் நடந்த மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றில், எனது முழுப் பதவிக்காலத்தையும் நான் நிறைவு செய்வேன் என்று மோடி உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்பதை அன்றே சூசகமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஒருவேளை மோடி மனம் மாறி விலகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மோடி விலக மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மோடியின் பிதாமகர்களான ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள், மோடி பதவி விலகத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளனராம். முதல்வர் பொறுப்பிலிருந்து விலகாமலேயே குஜராத்துக்காகவும், பாஜக பிரதமர் வேட்பாளராகவும் நாடு தழுவிய பிரசாரத்திலும் மோடி ஈடுபடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனராம்.
மேலும், மோடி இடத்தில் இன்னொருவரை குஜராத்தில் அமர்த்தி அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடாதே என்ற தயக்கமும் இந்த முடிவுக்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.
அதேசமயம், விரைவிலேயே பாஜக பிரசாரக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மோடி விலகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. அவருக்குப் பதில் சுஷ்மா சுவராஜ் அந்த இடத்திற்கு வரலாம் என்றும் தெரிகிறது. இது அத்வானியை சமரசப்படுத்த உருவாக்கப்பட்ட பார்முலா என்றும் கூறப்படுகிறது.