தேசிய நீரோட்டத்தில் கலந்த மோடியின் மாநிலத்தில் கல்விக்காக நீச்சலடிக்கும் மாணவர்கள்
காந்திநகர்: குஜராத்தில் ஒரு ஊரில் தினந்தோறும் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவ- மாணவியர்கள் கல்வி கற்பதற்காக ஆற்றை நீந்திச் செல்லும் அவலம் நீடிக்கிறது.
பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக விளங்குவதாக குஜராத் பாராட்டப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.
குஜராத்தை மாடலாகக் கொண்டு அதே போன்று இந்தியாவையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்றுதான் பாஜக தங்களது தேர்தல் வாக்குறுதியிலும் தெரிவித்துள்ளது.
ஆனால், மோடியின் குஜராத்தில் கல்வி கற்பதற்காக மாணவர்கள் ஆற்றைக் கடந்து செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லாமல் நீந்திச் செல்லும் அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹிரன் நதி....
குஜராத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் சுமார் 600 மீட்டர் அகலமுள்ள ஹிரன் நதி பாய்ந்து செல்கிறது. எனவே, இப்பகுதிக்கு அருகில் உள்ள 16 பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்காக தினந்தோறும் இந்நதியைக் கடந்தே செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
போக்குவரத்து வசதியில்லை...
இந்த நதியைக் கடப்பதற்கு போதுமான போக்குவரத்து வசதிகள் அரசால் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. பாலமும் இல்லை. இதனால், தினந்தோறும் இந்த நதியை சுமார் நூறுக்கும் அதிகமான மாணவ - மாணவியர் நதியை நீந்திக் கடக்கின்றனர்.
5 கி.மீ நடக்கவேண்டும்...
ஆற்றைக் கடக்கும் மாணவர்கள் பின்னர் 5 கிமீ தூரம் நடந்து சென்று அருகில் உள்ள உடவாடி கிராமத்தில் உள்ள பள்ளியைச் சென்றடைகின்றனர். இப்பள்ளி ஒன்றுதான் இந்த 16 கிராமங்களுக்கும் மிக அருகில் உள்ள ஒரே பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் நிலை...
நீந்திச் செல்லும் மாணவர்கள் தங்களது புத்தகம், உணவுப் பாத்திரம் மற்றும் சீருடையை நீண்ட பாத்திரம் போன்றவற்றில் வைத்து தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். மறுகரையை அடைந்தவுடன் மீண்டும் தங்களது சீருடையை அணிந்து அவர்கள் பள்ளி செல்கின்றனர்.
ஈர உடையுடன் மாணவிகள்...
ஆனால், இதில் கவலைக்குரிய விசயம் என்னவென்றால், மாணவர்கள் போல் மாணவிகளால் சுலபமாக சீருடையை கழற்றி வைத்து விட்டு நீந்திச் செல்ல இயலாத காரணத்தால், அவர்கள் தினந்தோறும் ஈர உடையுடனேயே கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பாராட்டு...
ஆனாலும், இந்த மாணவர்களை பாராட்டியே தீர வேண்டும். எப்பாடு பட்டாவது தங்களது கல்விப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனப் போராடும் இவர்களது மனோதைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.