மாநகராட்சியின் 'பவரை' கைப்பற்றிய கையோடு பெங்களூரில் பவர்-கட்டை நீக்கிய காங்கிரஸ் அரசு!
பெங்களூர்: கடந்த ஒரு மாதமாக பெங்களூர் நகர மக்களை வாட்டி வதக்கி வந்த மின்வெட்டு, இன்று முதல் முற்றிலுமாக திரும்பப்பெறப்படுகிறது.
வறட்சி காரணமாக, கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால், நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மின்வெட்டு அமலானது. பெங்களூரில் 2 மணி நேரம் அமலான மின்வெட்டு, பிறகு 3 மணிநேரமாகவும், 4 மணிநேரமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவின் ஐடி தலைநகர் என்று பெருமை கொண்ட பெங்களூரில், பொதுமக்களும், நிறுவன ஊழியர்களும் திணறினர்.
இந்நிலையில், பெங்களூர் மின் சப்ளை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று மக்களின் மனதில் பால் வார்த்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அணைகளில் நீர் இல்லாவிட்டாலும்கூட, அனல் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மின்சார சப்ளை சீரடைந்துள்ளது. எனவே புதன்கிழமை (இன்று) முதல் பெங்களூரில் மின்வெட்டு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் அதிக வாக்குகளை அளித்தனர். மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் 76 வார்டுகளிலும், பாஜக 100 வார்டுகளிலும் வென்றது. இந்த கோபத்தில் மின்வெட்டு மூலம், பெங்களூர் மக்களை காங்கிரஸ் அரசு துன்புறுத்துவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ம.ஜ.தவுடன் கூட்டணி சேர்ந்து, பெங்களூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்றிவிட்டது. இந்த நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த சில தினங்களிலேயே மின்வெட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.