தீவிரவாதத்திற்கு எதிரான போர் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: நரேந்திர மோடி
டெல்லி: அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்று கூட வன்முறையை குறிக்கவில்லை என்று உலக சுஃபி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
உலக சுஃபி மாநாடு டெல்லியில் நேற்று துவங்கியது. மாநாடு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
அல்லாஹ்வின் 99 பெயர்களை நினைத்துப் பார்த்தால் அதில் ஒன்று கூட வன்முறையை குறிக்கும் வகையில் இல்லை. அல்லாஹ்வின் முதல் இரண்டு பெயர்கள் அன்பு, இரக்கத்தை குறிக்கிறது. அல்லாஹ் ரஹ்மான் மற்றும் ரஹிம் ஆவார்.
வேற்றுமையை கொண்டாடுவது தான் சுஃபி கொள்கை. சுஃபி கொள்கை மீது நம்பிக்கை உள்ளவர்கள் மனிதர்களுக்கு சேவை செய்வது கடவுளுக்கு செய்யும் சேவை என்பார்கள். மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை பரப்புபவர்கள் உண்மையில் மதத்திற்கு எதிரானவர்கள்.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. வன்முறையின் கருப்பு நிழல் பெரிதாகிக் கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் தான் நம்பிக்கையின் வெளிச்சம். பிரபல சுஃபி கவிஞர் புல்லா ஷாவின் கருத்துப்படி கடவுள் அனைத்து இதயங்களிலும் உள்ளார். நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.
நாம் இறைவனை நேசித்தால் அவரின் படைப்புகளையும் நேசிக்க வேண்டும் என்றார்.