ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை: ரகுராம் ராஜன்
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை தாம் 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பல்வேறு செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.

ஆனால் ரகுராம் ராஜன் மாற்றப்படவில்லை. இதற்கு பாரதிய ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாஜகவின் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ரகுராம் ராஜனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் அனுப்பியிருந்தார். ரகுராம் ராஜனின் பதவிக் காலம் செப்டம்பர் 4-ந் தேதியுடன் முடிவடைவதால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
பிரதமர் மோடியும் கூட, ரகுராம் ராஜனின் பதவி நீட்டிப்பு விவகாரம் ஊடகங்களில் விவாதிக்கும் விவகாரம் அல்ல எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், தாம் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.
இதனால் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்ற சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications