இஸ்லாம் தடை செய்வதால் மது குடிப்போர், பன்றி கறி சாப்பிடுவோரை நாங்க தாக்கலாமா? ஒமர் அப்துல்லா கேள்வி
ஸ்ரீநகர்: "மது குடிப்பது, பன்றிக் கறி சாப்பிடுவதை இஸ்லாம் மதம் தடை செய்துள்ளது; ஆகையால் நாங்கள் மதுகுடிப்பவர்களையும் பன்றிக் கறி சாப்பிடுவோரையும் தாக்கலாமா? என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான ரஷீத்தை பாரதிய ஜனதா கட்சியின் 7 எம்.எல்.ஏக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். எம்.எல்.ஏ. விடுதியில் மாட்டிறைச்சி விருந்து நடத்தினார் என்பதற்காக இத்தாக்குதலை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நடத்தினர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் தாக்குதலில் இருந்து மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏக்கள் ரஷீத்தை பாதுகாப்பாக மீட்டனர். இச்சம்பவத்துக்கு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது:
சட்டசபையில் இன்று நடந்ததை சகித்துக் கொள்ள முடியாதது. சட்டசபையில் மாண்புமிகு உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டார். எம்.எல்.ஏ. ரஷீத்தை கொலை செய்யும் நோக்கத்துடன் "தாத்ரி பாணியில்" (உத்தரப்பிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதைப் போல) அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த விஷயத்தில் எங்களுடைய உணர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மதத்தை நாங்கள் உங்கள் மீது திணிக்க விரும்பவில்லை.
என்னுடைய மதத்தில் மது குடிப்பதும் பன்றி இறைச்சி சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்காக மது குடிப்பவர்களையும் பன்றி இறைச்சி சாப்பிடுபவரையும் நான் தாக்கிவிட முடியுமா?.
இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். மாட்டிறைச்சி மீதான தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியது எந்தவிதத்திலும் சட்டவிரோதம் இல்லை.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications