நியாயம் வென்றது... இனி எல்லாமே வெற்றிதான்- திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்
2ஜி அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இனி எல்லாமே வெற்றிதான் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இனி எல்லாமே வெற்றிதான். நியாயம் வென்றுள்ளது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், தவறான, அரசியல் உள்நோக்கத்துடன் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த தொடரப்பட்ட வழக்கு இது. நீண்டகால வாதங்களுக்கு பின்னர் நியாயம் வென்றுள்ளது என்றார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில்,
2ஜி வழக்கில் வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை வென்றிருக்கிறது, நீதி வென்றுள்ளது என்றார். கனிமொழி, ராசா விடுதலையால் மகிழ்ச்சி அடைவதாகவும் தவறான குற்றச்சாட்டை முன்வைத்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக வசந்தி ஸ்டான்லி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை தீர்ப்பாக ஏற்றுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.