நீதிபதிகள் மீது விமர்சனம் - மன்னிப்புக் கேட்டார் பிரசாந்த் பூஷன்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, மதன் பி. லோகுர், குரியன் ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வார இதழ் ஒன்றுக்கு பிரசாந்த் பூஷன் அளித்த பேட்டியில், "நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அட்டார்னி ஜெனரல் வாஹனவதி நீதிமன்றத்தில் பொய்யான விளக்கத்தை அளித்தார்.
ஆனால், அவர் மீது நீதிபதிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். நீதிமன்றத்தைக் கடந்து அவர்களுக்கு அட்டார்னி ஜெனரல் போன்ற உயரிய பொறுப்பில் இருப்பவர்களுடன் சமூக உறவு வலுவாக உள்ளது' என்று கூறியதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தை, மேற்கண்ட நீதிபதிகள் அமர்வு தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு பிரசாந்த் பூஷனை புதன்கிழமை அழைத்து விளக்கம் கேட்டது.
"நீதிபதிகளின் செயல்பாட்டை விமர்சிக்கும் உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரக்கூடாது?" என்று நீதிபதி ஆர்.எம். லோதா கேட்டார்.
நிலக்கரிச் சுரங்க விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகும் பல்வேறு வழக்குரைஞர்கள், "பிரஷாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியது:
நீங்கள் அளித்த பேட்டி எங்கள் கவனத்துக்கு வந்ததும் மிகுந்த கவலையடைந்தோம். வழக்குகளை எவ்வித பாரபட்சமின்றி, துணிச்சலுடன் நீதிபதிகள் விசாரணை நடத்துகின்றனர். அதேவேளை, ஒவ்வொருவரையும் திருப்திபடுத்துவது எங்கள் வேலையல்ல.
நீதிபதிகளுக்கு சமூக வாழ்வு கிடையாது. அவர்கள் சமூக ரீதியாக மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை.
நீங்கள் பொது வாழ்வில் இருக்கிறீர்கள். ஆனால், நாங்கள் சமூக ரீதியாக யாரையும் சந்திப்பதில்லை. சமூக வாழ்வில் இருந்து நாங்கள் துண்டித்துக் கொண்டுள்ளோம். இதை உங்களுக்கு விளக்க முடியாது" என்று நீதிபதிகள் கூறினர்.
மன்னிப்பு கேட்டார்
அதையடுத்து பிரசாந்த் பூஷண், "உச்ச நீதிமன்றம் மீது உயரிய மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளேன். எனது கருத்து நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது செயலுக்காக வருந்துகிறேன்" என்று கூறினார்.
அதையடுத்து, எதிர்காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடவேண்டாம் என்று பிரசாந்த் பூஷனைக் கண்டித்த நீதிபதிகள் அமர்வு, அவரது மன்னிப்பை பதிவு செய்து கொண்டு இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வதாகத் தெரிவித்தது.