ஆந்திராவில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி: ஜெய்ராம் ரமேஷ்
ஹைதராபாத்: தெலுங்கானா பிரிவினைக்கு எதிராக ஆந்திர முதல்வர் பதவியில் இருந்து கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி எந்த நேரத்திலும் அமலாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தெலுங்கானா பிரிவினைக்கு எதிராக முதல்வர் பதவியில் இருந்து கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார். அத்துடன் தம்மால் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரையில் இடைக்கால அரசின் முதல்வராகவும் கூட நீடிக்க முடியாது என்றும் ஆளுநரிடம் கிரண்குமார் ரெட்டி தெரிவித்திருந்தார்.
கிரண்குமார் ரெட்டியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் நரசிம்மனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க மத்திய அரசு முடிவு செய்ய இருக்கிறது. இன்று மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
இதனிடையே ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படும். லோக்சபா தேர்தலின் போது மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு மாநிலங்களை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதகதியில் மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.