பாலகோட் தாக்குதல் vs ரபேல் புகார்.. வாக்காளர்கள் ஆதரவு மோடிக்கா, ராகுலுக்கா? கள யதார்த்தம் இதுதான்
போபால்: லோக்சபா தேர்தலில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட இரு வார்த்தைகள், பாலகோட் மற்றும், ரபேல் ஆகியவைதான். பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரங்களில் தவறாமல் உச்சரிக்கும் மந்திரம் பாலகோட் என்றால், ராகுல் காந்தி தனது பிரச்சாரங்களில் விடாமல் பேசியது ரபேல்.
இந்த நாட்டின் பாதுகாவலர் என்று மோடி பேசி வந்தால், அந்த வார்த்தையையே அப்படி கொஞ்சம் மாற்றிப்போட்டு, 'காவலரே கள்வன்' என்று பொருள்பட, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வந்தார்.
இருவருமே கொஞ்சம் ஓவராகவே பிரச்சாரம் செய்யப்போய், தேர்தல் ஆணையத்திடம் புகார் போனது. முதல் முறை வாக்களிப்போர், தங்கள் ஓட்டுக்களை, பாலகோட் விமானத் தாக்குதலுக்காக அர்ப்பணிக்கும் வகையில் போட வேண்டும் என மோடி பேசினார். தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக அறிக்கை கேட்டது. மற்றொரு பக்கம், ரபேல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவிக்காத கருத்தை ராகுல் காந்தி தெரிவித்ததாக கோர்ட் அவரை விளாசியது.
வைரத்தொழிலை தேசிய மயமாக்குகிறது ஜிம்பாப்வே.. சீனாவுக்கு பேரிடி!!
மோடி, ராகுல் காந்தி நோக்கம்
முந்தைய அரசுகள் பலவீனமானவை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாலகோட் தாக்குதலின் மூலம், தன்னை இரும்பு மனிதராக காட்ட மோடி முயன்றால், ரபேல் குற்றச்சாட்டு மூலமாக, மோடியும், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்காதவர் கிடையாது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க ராகுல் காந்தி முயற்சி செய்து வருகிறார். இதில் எந்த பிரச்சாரத்திற்கு அதிக வெற்றி கிடைத்தது? மக்கள் மத்தியில் எந்த பிரச்சாரம் சென்று சேர்ந்தது என்பது முக்கியமானது.
மத்திய பிரதேச நிலவரம்
மத்திய பிரதேசத்தில் ஊடகம் ஒன்று நடத்திய ஆய்வில், ரபேல் விவகாரத்தைவிட பாலகோட்தான் பொது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. "பாலகோட்டில் நடத்திய தாக்குதல் தைரியமானது, பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட தக்க பதிலடி" என்பதே சாமானிய மக்களின் கருத்தாக உள்ளது.
ரபேல்னா என்ன
ரபேல் விவகாரத்தை பொறுத்தளவில், சில வாக்காளர்களுக்கு அப்படியென்றால் என்னவென்றே தெரியவில்லை. சிலருக்கு கொஞ்சம் தெரிந்துள்ளது. ஆனால், பெரும்பாலானோர், ரபேல் விவகாரம் ஒரு விஷயமே இல்லை என்றுதான் சொல்கிறார்கள். சிம்ராய் என்ற கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் என்ற பெட்டிக்கடைக்காரர் கூறுகையில், "நமது ராணுவ வீரர்கள் நாற்பது பேரை கொன்றனர். அதற்கு பழி வாங்க வேண்டாமா. அதான் பாலக்கோட்டில் மோடி தாக்குதலை நடத்தி 300 தீவிரவாதிகளை கொன்றார். மோடி எப்படிப்பட்டவர் என்பதற்கு இதுதான் சாட்சி. இதற்காகத்தான் மோடிக்கு எங்கள் சப்போர்ட். ரபேல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது எப்படியாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டு மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது" என்றார்.
நகரங்களிலும் பாலகோட்
போபால் நகரை சேர்ந்த நிதின் பிஸ்வாகர்மா என்பவரும் ஹேமராஜ் கருத்தில் பெரிதாக மாறுபடவில்லை. "நாம் யாருக்கும் குறைந்தவர்கள் கிடையாது என்பதை பாலகோட்டில் மோடி நிரூபித்துவிட்டார். 40 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு, மோடி பழி வாங்கிவிட்டார். ரபேல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதை தெரிந்து கொள்ள எனக்கு, அக்கறையும் கிடையாது" என்றார். பாதுகாவலரே திருடர் என்று காங்கிரஸ் சொல்லும் கோஷம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "காவலாளி ஒருபோதும் திருடனாக முடியாது" என்றார் நிதின் பிஸ்வாகர்மா.
ரபேல் தேர்தல் விஷயம் இல்லை
இதுபோன்ற கருத்துக்களை, மத்திய பிரதேசம் முழுக்கவே பார்க்க முடிகிறதாம். பாலகோட் தாக்குதல்தான் பொதுமக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதுபற்றி கேள்வி எழுப்பிய காங்கிரசை அவர்கள் வில்லனாகவே பார்க்கிறார்கள். காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூட ரபேல் விவகாரத்தை ஒரு பெரிய விஷயமாக எடுக்கவில்லை. ரபேல் தொடர்பாக ஓரளவு அறிந்தவர்களும், ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்ததைதான் குறிப்பிட்டு, மோடி மீது தவறு இல்லை என்ற கருத்தை முன் வைப்பதை பார்க்க முடிகிறதாம்.