இந்திரா மாதிரி மோடி.. ராகுல் தலைவரே இல்லை.. சொல்கிறார் ராஜ்தீப் சர்தேசாய்!
டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அவர் இந்திரா காந்தியைப் போல வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார். அதேசமயம், ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் ஒரு தலைவராக இன்னும் வளரவே இல்லை என்று பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கூறியுள்ளார்.
சர்தேசாய், "2014 The Election That Changed India" என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் மோடி குறித்தும், புதிய மத்திய அரசு குறித்தும், ராகுல் காந்தி குறித்தும், 2014 லோக்சபா தேர்தல் குறித்தும் எழுதியுள்ளார் சர்தேசாய்.
இந்த நூலில் மோடியை இந்திரா காந்தியுடன் அவர் ஒப்புமைப்படுத்தியுள்ளார். அதேசமயம், ராகுல் காந்தியை வலிமையில்லாத தலைவராக அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.
நூலிலிருந்து சில..
இந்திராவைப் போல மோடி
மோடி கிட்டத்தட்ட இந்திரா காந்தியைப் போல இருக்கிறார். மோடியின் தலைமைத்துவ ஸ்டைல் இந்திரா காந்தியைப் போலவே உள்ளது.
எதிர்க்கட்சிகளைக் கண்டு கொள்வதில்லை
எப்படி இந்திரா காந்தி, எதிர்க்கட்சியினரைக் கண்டு அச்சப்படாமல், தைரியமாக செயல்பட்டாரோ அதேபோல மோடியும் இருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தருவது குறித்துக் கவலைப்படவே இல்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அமைச்சரவையிலும் கிடுக்கிப்பிடி
அமைச்சரவையிலும் தனது பிடியை இறுக்கமாக வைத்துள்ளார் மோடி. அமைச்சர்களை முழுமையாக அவர் கட்டுப்படுத்துகிறார்.
அச்சத்தில் அமைச்சர்கள்
அமைச்சர்கள் மத்தியில் ஒரு பய உணர்வை அவர் விதைத்துள்ளார். என்னிடம் பேசிய ஒரு அமைச்சர் கூறுகையில், மோடியி்ன் அதிகாரப்பூர்வ வீட்டுக்குப் போனால், பின்வாசல் வழியாகத்தான் போகிறாராம். வீட்டு வராண்டாவில் நின்று கொண்டு யாருடனும் அவர் பேசுவதில்லையாம். எந்த இடத்திலிருந்து மோடி நம்மைக் கண்காணிக்கிறார் என்பதை ஊகிக்கவே முடியாது என்கிறார் அவர். வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்துக்குப் போய்த்தான் பேசுவாராம்.
ஜேட்லியை முழுமையாக நம்பும் மோடி
அருண் ஜேட்லியை முழுமையாக நம்புகிறார் மோடி. அதேசமயம், அவர் சுஷ்மா சுவராஜை சற்றும் நம்புவதில்லை.
அமைச்சர்களைத் தீர்மானித்தது ஜேட்லியும், ஷாவும்
அதேபோல அமைச்சர்களை தீர்மானித்ததும் கூட அருண் ஜேட்லியும், அமீத் ஷாவும்தான். அவர்கள் கொடுத்த பட்டியலை இறுதி செய்தது மட்டுமே மோடியின் வேலை.
சுஷ்மாவுக்கு மோடி வைத்த இராணி செக்
சுஷ்மாவுக்கு செக் வைப்பதற்காகவே ஸ்மிருதி இராணியை அமைச்சராக்கினார் மோடி. இதன் மூலம் பாஜகவின் பெண் அமைச்சர் முகமாக சுஷ்மா மட்டும் திகழ வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார் மோடி.
சில அமைச்சர்கள் மீது அதிருப்தி
ஜேட்லி உள்ளிட்ட சில அமைச்சர்களைத் தவிர மற்ற அமைச்சர்கள் மீது மோடிக்குத் திருப்தி இல்லை. அதிருப்தியுடன் உள்ளார்.
ராகுல் வேஸ்ட்
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கத் தவறி விட்டார். ஒரு சிறந்த தலைவர் என்ற தகுதியை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை, நிரூபிக்கவும் தவறி விட்டார்.
கட்சியைத் தூக்கி நிறுத்த முடியவில்லை
தள்ளாட்டத்தில் இருக்கும் தனது கட்சியை தூக்கி நிறுத்த அவரால் முடியவில்லை. நேரு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கூட அவரால் அந்த கமாண்டிங் தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த முடியவில்லை.
கட்சியினரே மதிப்பதில்லை
இன்னும் குறிப்பாக சொல்வதானால், ராகுல் காந்தியை அவரது சொந்தக் கட்சியினரே கூட பெரிதாக மதிப்பதில்லை.
காந்தி குடும்பம் என்பது மட்டும் போதாது
காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பது காங்கிரஸைப் பொறுத்தவரை பெரிய சொத்தாக இருந்தாலும் கூட ராகுல் காந்தியின் தலைமைத்துவ பண்பு அதை நிரூபிக்கத் தவறி விட்டது.
திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்
காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற தகுதியை மட்டும் இனியும் காங்கிரஸ் கட்சி பார்த்தால் கட்சிக்கு அபாயம்தான். மாறாக திறமை அடிப்படையிலான தலைவர்களை கொண்டு வர அது முயல வேண்டும். புதிய நோக்கங்கள், சிந்தனைகள், இலக்குகளுடன் அது செயல்பட்டால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்.
மோடியை எதிர்க்க திறமையான தலைவர் தேவை
இப்போதைய நிலையில் மோடியை எதிர்க்க வேண்டுமானால் காங்கிரஸுக்கு அவரைப் போன்ற ஒரு சக்தி வாய்ந்த தலைமை தேவை. நிச்சயம் அப்படிப்பட்ட தலைமையால்தான் மோடியை அடுத்த தேர்தலில் எதிர்க்கவாவது முடியும் என்று கூறியுள்ளார் சர்தேசாய்.