நளினி உட்பட 4 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனுத்தாக்கல் செய்தது. இம்மனு மீது வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது. அத்துடன் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசு அவசரம் அவசரமாக தாக்கல் செய்த அந்த மனுவில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்கக் கூடாது என்று மட்டுமே தெரிவித்திருந்தது. அதை ஏற்று உச்சநீதிமன்றம் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெறும் கைதிகளை விடுதலை செய்வதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி இடைக்கால தடை விதித்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரையும் விடுதலை செய்யவும் தடை கோரப்பட்டது. அது குறித்து தனியாக மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தின் தடை மூன்று பேர் விடுதலைக்கு மட்டும் பொருந்துமா? அல்லது 7 தமிழருக்கும் பொருந்துமா? என்ற சட்ட குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களோ சட்டப்படி மூன்று பேரின் விடுதலைக்குத்தான் இடைக்கால தடை பொருந்தும் என்றும் குறிப்பிட்டனர். இதனால் எஞ்சிய 4 பேர் விடுவிக்கப்படலாம் என்றும் இல்லை உச்சநீதிமன்றம் 'தற்போதைய நிலை' தொடரும் என்று கூறியிருப்பதால் யாருடைய விடுதலைக்கும் தற்போது சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நளினி உட்பட 4 பேர் விடுதலைக்கு எதிராகவும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இதன் மீது வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.