எடியூரப்பா முதல்வரானது அநியாயம்.. என்னையும் வழக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்.. ராம்ஜெத்மலானி மனு
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்த விவகாரத்தில் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video

டெல்லி : எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத தாக்கல் செய்துள்ள வழக்கில் தன்னையும் வாதியாக சேர்க்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞரும், பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த மே 15ம் தேதி வெளியான நிலையில், காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மஜத இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்த நிலையில், 104 தொகுதிகளைப் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதனை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்கக் கோரினர்.
அதன்படி இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ.போப்தே அமர்வு முன்பு நள்ளிரவு 1.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதத்தை இன்று மதியத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகுதான் தீர்ப்பு சொல்ல முடியும் என்றும், எடியூரப்பாவின் பதவியேற்பு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதனடிப்படையில் எடியூரப்பா இன்று காலை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு தன்னையும் இந்த வழக்கில் வாதியாக சேர்க்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை ஆஜராகுமாறு தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞரும், பாஜகவின் முன்னாள் சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி கூறுகையில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்றும், ஆளுநர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது .
மேலும், தான் எந்தக் கட்சி சார்பில் வாதாடப் போவதில்லை என்றும், ஆளுநரின் அரசியலமைப்புக்கு எதிரான முடிவு தன்னைக் காயப்படுத்தியதாலே மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராம்ஜெத்மலானியின் இந்த மனு பாஜகவிற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications