அமைச்சரவை விஸ்தரிப்பின்போது சதானந்த கவுடாவிடமிருந்து ரயில்வே துறை பறிப்பு?
பெங்களூரு: மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பின்போது ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா பதவி பறிக்கப்படும் அல்லது அவர் முக்கியத்துவம் குறைந்த வேறு துறைக்கு அமைச்சராக்கப்படுவார் என்கிறது டெல்லி வட்டாரம்.
கர்நாடக பாஜக தலைவராக சதானந்தகவுடா பதவி வகித்தபோதுதான் தென் இந்தியாவில் முதன்முறையாக அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பாவுக்கு பிறகு முதல்வராக நியமிக்கப்பட்ட சதானந்தகவுடா, கெட்ட பெயர் எதையும் சம்பாதிக்கவில்லை. இந்த வரலாறுகளால் மனம் குளிர்ந்த மோடி, தனது அமைச்சரவையில் முக்கியமான துறையான ரயில்வே துறையை சதானந்தகவுடாவுக்கு அளித்து அழகு பார்த்தார்.
சர்ச்சைகள்
ஆனால் சதானந்தகவுடா பதவியேற்றது முதல் அவர் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்தபடி உள்ளது. பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக கவுடா மீது புகார் எழுந்தது. மேலும், கவுடாவின் மகன் கார்த்திக் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக மைத்திரி என்ற நடிகை அளித்த புகாரும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. முன்ஜாமீன் பெற்றுக்கொண்டுதான் கார்த்திக் வெளியில் நடமாடிக் கொண்டுள்ளார்.
கோட்டை விட்ட கவுடா
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், மோடி எதிர்பார்த்த அளவுக்கு கவுடா தனது துறையில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. மந்தமான நிலையிலேயே ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன. மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்திலும் பெரிய முன்னேற்றமில்லை.
வேறு துறை
இதுபோன்ற காரணங்களால் சதானந்தகவுடாவை ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தூக்க மோடி திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இருந்தே தூக்கினால் கர்நாடகாவில் அவரது ஆதரவாளர்கள், மற்றும் பெரும்பான்மை மிக்க ஒக்கலிகர் ஜாதியினரின் கோபத்துக்கு பாஜக உள்ளாகும். எனவே, வேறு துறையை கவுடாவுக்கு ஒதுக்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிரடி மாற்றங்கள் அரங்கேறும்
வரும் 9ம்தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்பதற்கு கவுடா விவகாரம் ஒரு உதாரணம்தான். கோவா முதல்வர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கப்போவதும் ஒரு பெரிய மாற்றம்தான்.
சிவசேனாவுக்கு மேலும் 2 அமைச்சர்கள்
தற்போது மத்திய அமைச்சரவையில் சிவசேனாவை சேர்ந்த ஆனந்த் கீதே இடம்பெற்றுள்ளார். மேலும் 2 பெயர்களை சிபாரிசு செய்யுமாறும், விஸ்தரிப்பின்போது அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் சிவசேனாவுக்கு மோடி அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. இதனால் சிவசேனா மகிழ்ச்சியில் உள்ளது. மகாராஷ்டிராவில் கழற்றிவிட்டாலும், மத்தியில் தங்களை சேர்த்துக்கொண்டார்களே என்ற மகிழ்ச்சி சிவசேனாவுக்கு ஏற்பட்டுள்ளது.