சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜரான சல்மான் கான்
ஜோத்பூர்: சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் தன் மீது தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் கான், சயிப் அலி கான், தபு, சோனாலி பெந்த்ரே, கரிஷ்மா கபூர் உள்ளிட்டோர் ஹம் சாத் சாத் ஹைன் என்ற படத்தில் நடித்தனர். படம் 1999ம் ஆண்டு ரிலீஸானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கன்கானி கிராமத்தில் நடந்தது. அப்போது அதாவது 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு சல்மான் கான் காட்டுக்குள் சென்று 2 மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையில் அவர் உரிமம் காலம் முடிந்தும் அதை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியால் மான்களை வேட்டையாடியது தெரிய வந்தது.
இதையடுத்து ஜோத்பூர் போலீசார் ஆயுத சட்டத்தின்கீழ் சல்மான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஜோத்பூர் மாவட்ட முதன்மை ஜுடிசிஷயல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சல்மான் கான் இன்று ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தன் மீது இந்த வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சல்மான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.