கர்நாடகாவில் காட்டுத் தீயை அணைக்கச் சென்றபோது யானை தாக்கி தமிழக வனத்துறை உயர்அதிகாரி பலி
மைசூர் : கர்நாடகா அருகே நாகரகொலெ வனப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்கச் சென்ற தமிழக வனத்துறை அதிகாரி காட்டுயானை தாக்கியதில் மணிகண்டன் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவர் கடந்த இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு 2001ம் ஆண்டு முதல் ஐ.எப்.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இவர் கர்நாடகத்திலுள்ள நாகரகொலெ புலிகள் காப்பகத்தில் முதன்மை வனப்பாதுகாவலராகவும், கள இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். கோடைகாலம் ஆரம்பமானதை அடுத்து, சனிக்கிழமை அன்று கபினி அணை அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
இதனைத் தடுக்கும் முயற்சியல் தனது குழுவினருடன் டி.பி.குபே வனப்பகுதியில் தனது குழுவினருடன் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக காட்டுக்குள் இருந்து ஓடி வந்த யானை ஒன்று வனத்துறை ஊழியர்களைத் தாக்கியது.
இதில், மணிகண்டன் அந்த யானையிடம் சிக்கிக்கொண்டார். அப்போது அந்த யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த மணிகண்டனை, வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரின் உடலுக்கு தேனிமாவட்ட ஆட்சியர் பல்லவி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மணிகண்டனின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.