இசட் பிரிவு பாதுகாப்பை அனுபவிக்கும் ஷிண்டே மகள்... ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சரான சுசில்குமார் ஷிண்டேவின் மகள் இசட் பிரிவு பாதுகாப்பை பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விகார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் அரசியல் மற்றும் அரசியலில் தொடர்பில்லாதவர்களுக்கு வழங்கப் படும் பாதுகாப்பு குறித்து தகவல் பெற விண்ணப்பித்திருந்தார்.
அதன்படி, மகாராஷ்டிராவில் சுமார் 84 விவிஐபிக்களுக்கு 812 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டது.
ஷிண்டே குடும்பத்திற்கு...
அதிலும் குறிப்பாக மொத்தமுள்ள 812 போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களில் சுமார் 52 பேர் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயின் மகள் பிரணிதிக்கு நியமிக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ஷிண்டேயின் மனைவி உஜ்வாலாவுக்கு சுமார் 14 பாதுகாப்பு வீரர்களுடன் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதுகாப்பு வேண்டாம்...
ஆனால், இது குறித்து பிரணிதி கூறுகையில், ‘இந்த பாதுகாப்பு எங்களுக்கு தேவையில்லாதது. எனவே, இப்பாதுகாப்பை திரும்பப் பெறும்படி மாநில உள்துறை அமைச்சருக்கும், அம்மாநில டிஜிபிக்கும் கடிதம் எழுதியுள்ளோம். எங்களுக்கு வழங்கப் படும் இக்கூடுதல் பாதுகாப்பை பிற நல்ல காரியங்களுக்குப் பயன் படுத்தலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு 12 பேர்...
மகாராஷ்டிர ஆளுநர் சங்கரநாராயணனன், முதல்வர் பிரித்விராஜ் சவான், துணை முதல்வர் அஜீத் பவார், மத்திய அமைச்சர் சரத்பவார் உள்ளிட்ட 12 பேருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
சச்சினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு...
அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
எக்ஸ் பிரிவு பாதுகாப்பு...
நீதிபதி மிரிதுலா பட்கருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும், ரத்தன் டாடாவுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பும் அளிக்கப் பட்டுள்ளது.
பாதுகாப்பு கமிட்டியின் உத்தரவு...
பாதுகாப்பு கமிட்டியின் உத்தரவின் பேரிலேயே மேற்கூறியவர்களுக்கான பாதுகாப்பு ஏற்படு்த்தப் பட்டுள்ளதாக கூடுதல் பாதுகாப்பு கமிஷனர் கிரண் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட அதிகாரம் இல்லை...
மேலும், சம்பந்தப்பட்ட கமிட்டி ஆராய்ந்து யாருக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. பின்னர் அதனை செயல்படுத்த எங்களுக்கு உத்தரவிடுகிறார்கள். அக்கமிட்டியின் அனுமதியில்லாமல் யாருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்க இயலாது என அவர் விளக்கமளித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு...
தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெற்றுள்ள சமூக ஆர்வலர் விகார் இது தொடர்பாக கூறுகையில், ‘இப்படி அதிகளவிலான பாதுகாப்பை ஒரே இடத்தில் குவிப்பதன் மூலம் சராசரி மனிதர்கள் பாதுகாப்பில்லாத நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். அதற்குப் பதிலாக இக்கூடுதல் பாதுகாப்பை பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் நலனுக்கு செலவழிக்கலாம். பொதுமக்கள் பணம் இவ்வாறு தேவையற்ற பாதுகாப்பு விசயங்களுக்கு பயன்படுவதை தடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.