நீட் பாணியில் நீதிபதிகளுக்கும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு! மத்திய அரசின் அடுத்த பகீர்
டெல்லி: கீழ்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தின்போதும் நீட் போல பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, நீதித்துறை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்ற பொது செயலாளருக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புது தகவல் ஒன்று வெளியானது.
தேர்வு அமைப்பு
அதாவது, கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு யோசனைகளை தெரிவித்திருந்ததாம். அதில் முக்கியமானது, கீழ் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய தேர்வு அமைப்பை செயல்படுத்தும் யோசனையாகும்.
நீட் போன்றது
மாநில பணியாளர் தேர்வு ஆணையங்கள் நடத்துவது போல்தான் நீதிபதிகள் தேர்வு நடக்கும் என்றபோதிலும், நீட் தேர்வு போன்று பொதுவான ஒரே மாதிரி தேர்வு வழியாக அனைத்து மாநிலங்களிலும் நீதிபதிகள் நியமனம் நடக்கும்.
மாநில அரசுகள் கருத்து
இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் ஜூன் 30க்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு முன்னுரிமை கொடுக்கும், தமிழகம் என்ன கருத்தை தெரிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இதில் ஏற்பட்டுள்ளது.
நிலுவை வழக்குகள்
நாடு முழுவதுமாக மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 2.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நீதித்துறையின் 2015-16ம் ஆண்டு அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கு ஆபத்தா?
நீட் தேர்வால் ஏழைகள், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பாதிக்கப்படுவதாகவும், பணக்காரர்களும், முன்னேறிய ஜாதியினருமே டாக்டர்களாக வலம் வரும் காலம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையில், நீதிபதிகள் தேர்விலும் பொது நுழைவுத் தேர்வுக்கு அரசு சம்மதித்தால், அரசினர் சட்டக் கல்லூரிகளில் பயின்ற சாமானிய பின்புல மக்கள் எப்படி நீதித்துறையில் கோலோச்ச முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.