பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் கைது
தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி சென்றனர். நதிகளை இணைக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் அவர்கள் கடந்த புதனன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை நேற்று முன் தினம் சந்தித்து தங்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் கையில் காலிப் பானைகளுடன் ரேஸ் கோர்ஸ் மெட்ரோ நிலையத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு சென்றனர். அங்கிருந்து அவுரங்கசீப் சாலை வழியாக பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலைக்கு செல்ல முயன்றனர்.
ஆனால் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலைக்குள் நுழையாதவாறு விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.