நரேந்திர மோடி 'ஆப்' பயனாளிகள் தகவலை திருடியதா? மத்திய அமைச்சர் விளக்கம்
நரேந்திர மோடி செயலியில் தகவல்கள் கசிவதாக வந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உருவாக்கப்பட்ட செயலி மூலம் தகவல்கள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு கசிவதாக வந்த குற்றச்சாட்டுகள் கட்டுக்கதைகள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கேஜே அல்போன்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் செயல்படும் செயலியில் பதிவு செய்யப்படும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு தரப்படுவதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று குற்றம்சாட்டியது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் மூலம் பேஸ்புக் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தாரைவார்க்கிறார்
ராகுல்காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி மூலம் அமெரிக்க நிறுவன நண்பர்களுக்கு தாரை வார்க்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
ராகுலுக்கு தொழில்நுட்பம் தெரியாது
இதை பிரதமர் அலுவலகம் மறுத்தது. மேலும் ராகுலுக்கு தொழில்நுட்பம் குறித்து ஒன்றும் தெரியாது என்று கூறப்பட்டது. மோடி செயலி மூலம் பயனாளிகளின் ஆதார் எண், வங்கி தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவை கட்டுக்கதைகள்
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கேஜே அல்போன்ஸ் கூறுகையில் உங்கள் தகவல்களை வெளிநாட்டு நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிப்பார் என்று நம்புகிறீர்களா. அதெல்லாம் கட்டுக்கதைகள்.
தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன
ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி தானே கொடுத்துள்ளீர்கள். உங்கள் தகவல்கள் திருடப்படாது என்பதை உறுதியாக கூறுகிறேன். அவை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் தகவல்களை பெற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அல்போன்ஸ்.