தேஜாஸ் திட்டத்தை இழுத்து மூட முயற்சித்த சக்திகள் - திட்ட இயக்குநர் பரபரப்புத் தகவல்
பெங்களூரு: தேஜாஸ் திட்டத்தை (இலகு ரக விமானம்) 2007ம் ஆண்டு இழுத்து மூட சிலர் கடுமையாக முயன்றனர். ஆனால் அதிலிருந்து தேஜாஸ் தப்பியது என்று அதன் திட்ட இயக்குனரும், ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் இயக்குநர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளவருமான பி.எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தை கடந்த 10 வருடமாக தலைமையேற்று திறம்பட கையாண்டவர் சுப்ரமணியம். தற்போது தனது பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளார். 2005ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு தலைமையேற்றார் சுப்பிரமணியம்.
இதுகுறித்து நமது செய்தியாளரிடம் சுப்பிரமணியம் கூறுகையில்,
நெருக்கடிகள்...
பல கடுமையான நெருக்கடிகளை நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது. தேஜாஸ் திட்டத்தையே நிறுத்த 2007ல் சிலர் மிகக் கடுமையாக முயன்றனர். அந்த ஆண்டு மிகவம் சவாலானதாக இருந்தது. ஆனால் அதை நாங்கள் திறமையாக சமாளித்தோம். இன்று வரை அந்தத் திட்டம் வெற்றிகரமாக செய்பட எங்களது கடுமையான முயற்சிகளும் காரணமாகும்.
உறுதி...
இந்தத் திட்டத்துக்கு எதிராக பல கூட்டங்கள் நடந்தன. ஆனால் நான் உறுதியாக நின்றேன். அரசுக்கு நம்பிக்கை கொடுத்தேன். நிச்சயம் சரியான சமயத்தில் நம்மால் இதை டெலிவரி செய்ய முடியும் என்று நம்பிக்கை தந்தேன்.
வரலாறு...
அதன் பின்னர் நடந்தது வரலாறு. நாங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. தொடர்ந்து முன்னேறி சாதனை படைத்தோம்.
சவால்...
2007ல் நடந்த நடவடிக்கைகள் எங்களுக்கு நிச்சயம் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போலத்தான் அமைந்தது. ஆனால் யாரும் பயந்து போய் விடவில்லை. சிறிய தடுமாற்றம் தான் அது. நாங்கள் ஆடித்தான் போனோம். ஆனால் சவாலாக நினைத்து செயல்பட்டோம். நம்பிக்கையோடு செயல்பட்டோம்.
முக்கியக்காரணம்...
இதற்கு முன்பும் கூட பலமுறை இந்தத் திட்டத்திற்கு எதிரான நடவடிகைகள் நடந்துள்ளன. ஆனால் நாங்கள் அசரவில்லை. இதுதான் இந்தத் திட்டம் வெற்றி அடைய முக்கியக் காரணம்.
அடுத்தாண்டு...
தேஜாஸ் திட்டத்துக்கு எதிராக செயல்பட்டோரின் விவரங்களைக் கூற விரும்பவில்லை. அதை விட்டு விட்டு நாங்கள் வந்து விட்டோம். தற்போதைய திட்டம் குறித்து மட்டும் கவனம் செலுத்துகிறோம். இறுதிக் கட்ட பணிகள் முழுமையை எட்டியுள்ளன. 2016 மார்ச்சில் அது முடிவடையும்.
அனைவரின் நம்பிக்கை...
தேஜாஸ் திட்ட இயக்குநராக நான் அனைவரின் நம்பிக்கை மற்றும் ஆதரவைப் பெற்று பணியாற்றினேன். அதற்காக நான் பெருமைப் படுகிறேன். இந்தத் திட்டம் தொடர்பான சரியான தகவல்கள் ஊடகங்களில் வரவில்லை' என்றார் அவர்.