"எய்ட்ஸை கட்டுப்படுத்த ஆணுறை போதாது" - மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை
டெல்லி: ஆணுறையால் எய்ட்ஸ் பரவாது என்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யாமல், கலாச்சார சீர்கேட்டை வலியுறுத்தும் பிரச்சாரங்கள் வருங்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு ஹர்ஷவர்த்தன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆணுறை உபயோகித்தால் எய்ட்ஸ் பரவாது என்று இதுவரை பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இது தவறான மனஓட்டத்துக்கு காரணமாகிவிடும். எந்த மாதிரியான தவறான பாலியல் தொடர்பும் வைத்துக்கொள்ளலாம், ஆனால், ஆணுறை மட்டும் உபயோகித்துக்கொண்டு தப்பிவிடுங்கள் என்று அரசே சொந்த செலவில் பிரச்சாரம் செய்ததைப்போல இது தெரிகிறது.
இந்த நிலையை மாற்றி, 'ஒருவனுக்கு, ஒருத்தி' என்ற இந்திய பண்பாட்டை மக்கள் மனதில் ஆழ விதைப்பதுதான் தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேற்கத்திய கலாச்சாரத்தால் இந்தியாவின் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிவருவது பாஜக. அக்கட்சியின் ஆட்சி அமைந்தபிறகு தற்போது முதன்முறையாக பாஜகவின் கொள்கைசார்பு திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்கும்வகையில் அமைச்சர் கருத்து கூறியுள்ளதாக இப்பேட்டி பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து எய்ட்ஸ் சார்ந்த பிரச்சினைகளை கையாளும் 'தார்ஷி' அமைப்பின் செயல் இயக்குநர் பிரபா கூறுகையில், "ஆணுறை கிடைப்பதால் அனைவரும் கள்ளத்தொடர்பில் ஈடுபடபோவதில்லை. எனவே கலாச்சாரத்தை மட்டும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து ஆணுறை பயன்பாட்டை கெடுத்துவிட்டுவிட கூடாது. கலாசார பாகுபாடின்றி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் சாதாரணமாகிவிட்டது. எனவே அவர்களுக்கு ஆணுறை குறித்த விழிப்புணர்வு அவசியம். எனவே ஆணுறை உபயோகித்து செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்வதுதான் சரியாக இருக்கும்" என்றார்.