ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் மொத்த வாக்குகளும் "லம்ப்"பாக பாஜகவுக்கு கிடைக்காதோ??
மும்பை: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களைச் சந்திப்பதற்காகவே டிடிவி தினகரன் மும்பைக்குப் போனதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பின்னால் காங்கிரஸ் மேலிடமும் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மொத்த வாக்குகளும் பாஜகவுக்கு அப்படியே லட்டு போல லம்ப்பாக கிடைப்பது சந்தேகம் என்றும் சொல்லப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களது வாக்குகள் உங்களுக்கே என்று தினகரன் தரப்பு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அவரது வாக்குகளை இழுக்க காங்கிரஸ் களம் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி 1.. தலை 3!
அதிமுக தற்போது 3 பிரிவுகளாக இயங்கி வருகிறது. எடப்பாடி அதிமுக, சசிகலா +தினகரன் அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என மூன்றாக பிரிந்து போயுள்ளனர். தீபா தனியாக "ஒர்க்கிங் ஃபிரம் ஹோம்" அரசியலை நடத்தி வருகிறார்.
ஆதரவு உங்களுக்கே
ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது ஆதரவு பாஜகவுக்கே என்று இந்த மூன்று கட்சியினரும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர், தனித் தனியாக அறிவித்தும் உள்ளனர்.
திடீர் குழப்பம்
இந்த நிலையில், திடீரென காங்கிரஸ் தரப்பில் ஒரு புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது சசிகலா தரப்பை தங்களுக்கு சாதகமாக வளைக்க முடியுமா என்று பார்த்து வருகின்றனராம். மீரா குமாருக்கு ஆதரவாக இவர்களை வாக்களிக்க வைக்க முடியுமா என்று கேட்டு வருகின்றனராம்.
திருநாவுக்கரசர் மூலமாக
இதுதொடர்பாக சசி குடும்பத்துக்கு நெருக்கமானவரான தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் தினகரனிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் திடீரென மும்பை கிளம்பிப் போனார் தினகரன். அங்கு சில காங்கிரஸ் தலைவர்களை அவர் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்குத் தகவல்
அங்கு கேட்டுக்கொண்டதை சசிகலாவிடம் தெரிவிக்கும் வகையில்தான் அவர் பெங்களூர் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. சசிகலா என்ன முடிவு எடுத்து சொல்கிறாரோ அதன்படி தனது தரப்பு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு தெரிவித்து வாக்களிக்க தினகரன் உத்தரவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் நடவடிக்கையால் குடியரசுத் தலைவர் தேர்லில் அதிமுகவின் மொத்த வாக்குகளும் பாஜகவுக்கே கிடைக்கும் என்பதில் தற்போது குழப்பமும், சந்தேகமும் வந்துள்ளது.