'அம்மா'வால் பெங்களூர் சிறை நடவடிக்கைகள் இவ்வளவு பாதிக்கப்படுகிறதா?
பெங்களூர்: ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதால் அன்றாட சிறை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா சிறையில் இருப்பதால் அன்றாட சிறை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
பார்வையாளர்கள்
அதிமுவினர் யாராவது பார்வையாளர்கள் என்ற பெயரில் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதால் பிற சிறை கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதாம்.
தெரிந்த முகங்கள்
சிறைக்கு பலமுறை வந்து அதிகாரிகளுக்கு தெரிந்த முகமாக உள்ளவர்களை மட்டுமே கைதிகளை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறதாம்.
பேக்கரி
சிறை வாசலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பேக்கரியில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பேக்கரியை நடத்துபவர் கூறுகையில், எப்பொழுது பார்த்தாலும் ஏராளமான போலீசார் நிற்பதால் தற்போது பேக்கரிக்கு வழக்கமாக வருபவர்களும், தொழிற்சாலை ஊழியர்களும் வருவது இல்லை என்றார்.
கேக்
ஜெயலலிதா பற்றிய செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாளர்களும், போலீசாரும் சில பொருட்களை மட்டுமே வாங்குகிறார்கள். 20 வகையான கேக்குள் விற்காமல் வீணாகிறது என்றார் அந்த கைதி.
கவுன்சிலிங்
ஜெயலலிதா சிறையில் இருப்பதால் பிற கைதிகளுக்கு வழங்கப்படும் கவுன்சிலிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயசிம்மா
ஜெயலலிதா இருப்பதால் சிறை நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தெரிவித்துள்ளார்.