மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?: அல் கொய்தாவுடன் தொடர்புடைய இளம்பெண் உள்பட 11 தீவிரவாதிகள் கைது
கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டனர்.
மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய புதிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கோலாலம்பூர் மற்றும் கேதா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். அந்த அமைப்பு முஸ்லீம் நாடுகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
கைதான 11 பேர் 22 முதல் 55 வயது வரை உள்ளவர்கள். அதில் ஒரு இளம் விதவை பெண்ணும் அடக்கம். விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் தான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
பாகம்
விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்பட்ட போதிலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத முகாம்
விசாரணையில் தீவிரவாதிகள் மலேசியாவில் தீவிரவாத முகாம்களை நடத்த திட்டமிட்டதை ஒப்புக் கொண்டனர். ஆனால் விமானம் மாயமானதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஷூ வெடிகுண்டு
கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மருமகன் சுலைமான் அபு கைத் வழக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த சாஜித் பதத் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் நடந்த தீவிரவாத பயிற்சி முகாமில் கலந்து கொண்டபோது மலேசியர்களிடம் ஷூ வெடிகுண்டை அளிக்குமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நான் என் ஷூ ஒன்றை மலேசியர்களிடம் அளித்தேன். அது விமானி அறைக்குள் செல்ல பெறப்பட்டது.
9/11 தாக்குதலை திட்டமிட்டவர்
இங்கிலாந்தில் ஒளிந்திருக்கம் பதத் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் 9/11 தாக்குதலை திட்டமிட்ட காலித் ஷேக் முகமது தான் மலேசிய தாக்குதலுக்கும் திட்டமிட்டார் என்றார்.
பேட்டரிகள்
மலேசிய விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 200 கிலோ லித்தியம் பேட்டரிகளால் விமானம் தீப்பிடித்து எரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.