நிலநடுக்கத்தால் இடிந்த இந்தோனேஷிய சிறைகள்.. 1200 கைதிகள் தப்பியோட்டம்!
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பெரும்பாலான சிறைகள் இடிந்த நிலையில் அங்கிருந்து 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டதாக அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்தது.
இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் டோங்கலா என்ற பகுதியை மையமாக கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இதை தொடர்ந்து அந்நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கையும் விடுத்தது.
எனினும் இந்த எச்சரிக்கையை திரும்ப பெற்ற சில மணி நேரத்திலேயே சுனாமி தாக்கியது. சுமார் 6.6 அடி உயரத்துக்கு ஆர்ப்பரித்த அலைகள் 3 நகரங்களை விழுங்கின.
[ நாட்டையே புரட்டி போட்ட 4 தீர்ப்புகளுடன் குட்பை சொன்ன தீபக் மிஸ்ரா! ]
தப்பியோட்டம்
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் அங்கிருந்த சிறைச்சாலைகள் இடிந்து கைதிகள் தப்பியோடிவிட்டதாக அரசு கூறியது.
மோசமாக பாதிப்பு
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் பலு மற்றும் டோங்கலா ஆகிய பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகள் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் உயிருக்கு பயந்து தப்பியோடியிருக்கலாம்.
குற்றப்பிரிவு
டேங்கலாவில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட தீவிபத்தில் 343 கைதிகள் தப்பியோடிவிட்டனர். இவர்கள் பெரும்பாலானோர் ஊழல் மற்றும் போதை பொருள் கடத்தல் குற்றப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் 5 பேர் சிறிது நாட்களுக்கு முன்னர் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
விரைவில் பிடிப்போம்
பலு சிறையிலிருந்து 100 பேர் வரை தப்பியோடிவிட்டனர். மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர். அநேகமாக அவர்கள் குடும்பத்தினரை பார்க்க சென்றிருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. விரைவில் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என்றும் தெரிவித்தனர்.