ஈரானில் விமானம் தரையில் விழுந்து விபத்து: 48 பேர் பலி
தெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று தெஹ்ரானில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் பலியாகினர்.
ஈரானைச் சேர்ந்த செபஹன் ஏர் நிறுவன விமானம் ஒன்று 40 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் தலைநகர் தெஹ்ரானில் இருந்து நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகருக்கு இன்று காலை 9.20 மணிக்கு கிளம்பியது. விமானம் பறக்கத் துவங்கிய உடனேயே என்ஜின் நின்று போனது. இதனால் விமானம் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 48 பேரும் பலியாகினர். 52 பேர் பயணிக்கும் இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் மாநில விமான அமைப்புக்கு சொந்தமான சிறிய ரக விமானம் சோதனை ஓட்டத்தின்போது கிஷ் தீவுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட் அருகே விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமான வானிலை காரணமாக வடமேற்கு ஈரானில் அந்நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் 77 பேர் பலியாகினர். கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் தெஹ்ரானில் இருந்து கிளம்பிய விமானம் வடமேற்கு ஈரானில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 168 பேர் பலியாகினர். அதற்கும் முன்பாக 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்கிழக்கு ஈரானில் இல்யூஷின் என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 302 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.