அடுத்த மாதம் பூமியை முத்தமிடும் தூரத்தில் 'கிராஸ்' செய்யப் போகிறதாம் ஒரு பெரிய விண்கல்!
கேப் கேனவரல், புளோரிடா: 100 அடி அகலம் கொண்ட ஒரு மிகப் பெரிய விண்கல்லானது அடுத்த மாதவாக்கில் பூமியை கடந்து போகவுள்ளதாக நாசா தெரிவித்துல்ளது
இந்த விண்கல்லின் பெயர் 2013 டிஎக்ஸ்68 என்பதாகும். மிகப் பெரிய விண்கல்லாக இருந்தாலும் கூட இது பூமியைக் கடப்பதனால் நமது கிரகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் நாசா விளக்கியுள்ளது.
இந்த விண்கல்லின் நகர்வை தற்போது நாசா விஞ்ஞானிகள் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது நிச்சயம் பூமி மீது மோத வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
கடந்த 2013ம் ஆண்டுதான் இந்த விண்கல்லானது கண்டுபிடிக்கப்பட்டது. இது மார்ச் 5ம் தேதி பூமியிலிருந்து கிட்டத்தட்ட 17,700 கிலோமீட்டர் என்ற தொலைவில் நெருங்கி வருமாம்.
இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவில் 20ல் ஒரு பங்காகும். மேலும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களுக்கும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில திடீர் பாதை மாற்றம் காரணமாக இது பூமியை மேலும் நெருங்கி வரவும் வாய்ப்புள்ளதாம்.
கடைசியாக இந்த விண்கல் நமது கண்ணில் பட்டது 2013ம் ஆண்டுதான். அப்போது 3 நாட்கள் மட்டுமே இது நமது பார்வையில் பட்டது. அதன் பிறகு இது எங்கே போனது என்பது தெரியாமல் இருந்து வந்தது.
அடுத்து இந்த விண்கல்லானது 2017ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பூமியின் அருகே நெருங்கி வருமாம். இருப்பினும் அப்போதும் கூட இதனால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படதாம். அப்போது இதற்கும், பூமிக்கும் இடையிலான தூரம் சற்று அதிகமாக இருக்குமாம்.
கடந்த 2013ம் ஆண்டு ரஷ்யாவை நோக்கி விழுந்து, வானிலேயே வெடித்துச் சிதறிய மிகப் பெரிய விண்கல்லைப் போல 2 மடங்கு பெரிய விண்கல் இது என்றும் நாசா கூறியுள்ளது. ரஷ்ய விண்கல் வெடிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல தற்போது பூமியை நோக்கி நெருங்கி வரும் விண்கல்லானது ஒரு வேளை பூமியின் வளி மண்டலத்திற்குள் இழுக்கப்பட்டு வெடித்துச் சிதறுமானால் ரஷ்ய சம்பவத்தைப் போல இரண்டு மடங்கு பாதிப்பை நாம் சந்திக்க நேரிடலாம் என்றும் நாசா கூறியுள்ளது.