முதல் முறையாக அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா!
அதிக எடையை சுமந்து செல்லும் சக்திவாய்ந்த ராக்கெட்டை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பெய்ஜிங்: முதல் முறையாக அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது சீனா.
விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் சீனாவின் செயல்பாடு அதிவேகமாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 விஞ்ஞானிகளுடன் செயற்கைகோளை விண்ணில் செலுத்திய சீனா வான் சார்ந்த தனது ஆராய்ச்சிகளில் புதிய மைல்கல்லை தொட்டது.
இந்நிலையில் லாங் மார்ச்-5 என்ற ராக்கெட்டை நேற்றிரவு சீனா விண்ணில் செலுத்தியது. 25 டன் எடையுடன் இரண்டு கட்டங்களாக ஏவப்பட்ட இந்த ராக்கெட் தான் சீன வரலாற்றிலேயே அதிக எடைகொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு ஹைனன் மாகாணத்தில் உள்ள வெங்சாங் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்த 40 நிமிடங்களில் நிலைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதிக எடை கொண்ட இந்த ராக்கெட் கெரோசின் மற்றும் திரவ ஆக்ஸிஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயங்குவதாக சீன விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையம் அமைப்பது என்பது போன்ற சீனாவின் எதிர்கால திட்டங்களுக்கு இந்த ராக்கெட் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.