அமெரிக்காவில் பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்
நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் நடத்தும் மாடுகள் சரணாலயத்திற்கு வெளியே துண்டிக்கப்பட்ட மாட்டின் தலையை யாரோ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள ஜான்சன் டவுன்ஷிப் பகுதியில் சாஸ்திரி என்பவர் 20 மாடுகளை வைத்து சரணாலயம் நடத்தி வருகிறார். நியூயார்க் சிட்டி காலேஜ் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியராகவும், டீனாகவும் இருந்து ஓய்வு பெற்றவர் சாஸ்திரி.
இந்நிலையில் யாரோ குண்டடிபட்டு துண்டிக்கப்பட்ட மாட்டின் தலையை அந்த சரணாலயத்தின் வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதை பார்த்து சாஸ்திரி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து நெவாடாவை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் கூறுகையில்,
சாஸ்திரியின் சரணாலயத்தில் நடந்த சம்பவத்தால் அமெரிக்காவில் வசிக்கும் இந்து சமூகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பசுவை கடவுளாக வணங்குகிறார்கள். கிருஷ்ண பகவானை பசுக்களை காப்பவர் என்ற பொருள்படும்படி கோபாலா என்று அழைக்கிறார்கள். பசுவை நாங்கள் கோமாதா என்று அழைக்கிறோம்.
நியூயார்க்கில் உள்ள க்வீன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டில் 40 இந்து மதக் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ஆன்டாரியோவில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தவிர பல்வேறு இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்றார்.