மிரட்டும் பேரி புயல்.. வெள்ளக்காடான நியூ ஆர்லியன்ஸ்.. சூறாவளியாக மாறுமோ என மக்கள் அச்சம்
வாஷிங்டன்: பேரி புயல் கரையை நோக்கி வருவதால் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்று சுழன்று வருவதால் சூறாவளியாக மாறக் கூடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பேரி புயல் காரணமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை முதல் கனமழை கொட்டி வருவதால் வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தற்போது பேரி புயல் கரையை கடந்து வருவதால் மேலும் மழை பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறும், வீட்டை விட்டு வெளியே வராதமாறும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெக்ஸ்ட் வீக் வெளுத்து வாங்கும் மழை.. இன்று முதல் வெள்ளோட்டம்.. சென்னைக்கு நார்வே மையம் அறிவிப்பு
சூறாவளி
வடக்கு மெக்சிக்கோவிலிருந்து லூசியானா நோக்கி புயல் மணிக்கு 65 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சில இடங்களில் 60 செ.மீ. மழை பெய்யக் கூடும். மேலும் இந்த புயலின் வேகம் மணிக்கு 75 மைல் ஆக இருந்தால் அது சூறாவளியாக மாறக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிரம்ப் அறிவிப்பு
மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை நிறுத்திவிட்டன. லூசியானாவுக்கு அவசர நிலையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அபாயம்
மேலும் 60 சதவீத எண்ணெய் நிறுவனங்கள் பூமிக்கடியில் பணியாற்றி வருவதால் எண்ணெய் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. பேரி புயல் மிகவும் ஆபத்தான மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயலாகும். மிஸிசிப்பி ஆற்றிலும் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
காலியான மளிகை சாமான்கள்
வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து நியூ ஆர்லியன் நகர மக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர், ஐஸ், நொறுக்குதீனிகள், பீர் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வாங்கி வருகின்றனர். இதனால் பல கடைகளில் ஸ்டாக் இல்லாத நிலை உள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்ரீனா புயலுக்கு பிறகு நியூ ஆர்லியன்ஸை பதம் பார்க்கும் புயலாக பேரி உருவாகியுள்ளது.