கராச்சி விமான நிலைய தாக்குதல் மோடியின் திட்டமே... பாக். தீவிரவாத தலைவர் குற்றச்சாட்டு
கராச்சி: கராச்சி விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் மோடிதான் காரணம் என டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான். தீவிரவாத அமைப்பான ஜமாத் உத் தவா.
இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடையணிந்து நுழைந்த சில தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியானார்கள். இத்தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என தெஹ்ரீக் - இ - தாலிபான் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், ஜமாத் உத் தவா என்ற பெயரில் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான ஹஃபீஷ் சையத் கராச்சி தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவால் தொடுக்கப்பட்ட இந்த போரின் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழுவினர் உள்ளதாகவும், உண்மையான எதிரி யார் என்பதை பாகிஸ்தான் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேப்பொன்று ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கம் தனியாக விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், கராச்சி விமான நிலையத்தின் மீதான தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரான மோடியின் திட்டம் என்றும், புதிய 'இந்துத்வா அரசின்' நேரடியான பதிலடி என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.