என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் "செல்லத்தை".. எலும்பும் தோலுமாக.. கொந்தளித்து குமுறும் இணையவாசிகள்!
சிங்கங்கள் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கின்றன
அப்யூஜா: நைஜீரியாவிலுள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில், எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தை பார்த்து பொதுமக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்!
முரட்டு விலங்கு.. காட்டு ராஜா.. கம்பீர நடை.. கர்ஜனை குரல் என பல அம்சங்களுக்கு சொந்தமானதுதான் சிங்கம்... இப்படித்தான் நாம் இதுவரை பார்த்தும், கேட்டும் வந்திருக்கிறோம்.. ஆனால், எலும்பும் தோலுமாக சிங்கங்களின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பார்த்ததும் இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்!
நைஜீரியாவில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.. கடுனா என்ற இடத்திலுள்ள காம்ஜி கேட் என்ற வன விலங்கு பூங்காவில் நிறைய விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள சிங்கங்களை பார்த்தால், உண்மையிலேயே அவை சிங்கம் போலவே தெரியவில்லை.. மிகவும் மெலிந்து கிடக்கின்றன.. உடல்கள் ஒட்டி உள்ளன.. எலும்புகள் வெளியே தெரிகின்றன... இதுவரை கொழு கொழு சிங்கத்தை பார்த்த நமக்கு எலும்பும் தோலுமாக உள்ள சிங்கங்களை பார்க்கவே வருத்தமாக உள்ளது.
இந்த சிங்கத்தை அங்கு சென்ற பார்வையாளர்கள் போட்டோ எடுத்து மீடியாவில் பதிவிடவும்தான் அனைவருக்கும், இது பற்றி தெரியவந்துள்ளது.. "முதலில் அந்த சிங்கத்தை பார்த்ததும் நான் ஷாக் ஆயிட்டேன்.. என்னால் அங்கிருந்து நகரவே மனசில்லை.. பல நாள் பட்டினியாக அந்த சிங்கம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. இதற்கு முன் சிங்கத்தை நான் இப்படியொரு கோலத்தில் கண்டதில்லை. அங்கு இருக்கும் பல விலங்குகளுக்கு முறையாக உணவு அளிக்கப்படவில்லை" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பார்வையாளர் பதிவிட்டுள்ளார்.
ஜோ பிடனுக்கு மகிழ்ச்சி பொங்க வாழ்த்து சொல்லும் கமலா ஹாரிஸ் வீடியோ- செம வைரல்
இந்த மிருக காட்சி சாலைக்குள் செல்ல, அரசு தரப்பில் ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.. ஆனால், அங்குள்ள விலங்குகளை சரியாகவும், முறையாகவும் பராமரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த போட்டோக்களில் உள்ள சிங்கத்துக்கு விலா எலும்புகள் எல்லாம் அப்படி அப்படியே வெளியே தெரிகிறது.
சிங்கம் மட்டுமல்ல, அங்குள்ள குரங்குகள் உட்பட பல விலங்குகள் இப்படித்தான் இருக்கிறதாம். கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் போதிய உணவின்மையால் இதுபோல பல உயிரினங்கள் அங்கு இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கைகளை அழுத்தமாக விடுக்க தொடங்கி உள்ளனர்.