ஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா?
Recommended Video
ரியோடி ஜெனீரோ: சென்டினல் பழங்குடியினர் வசித்து வரும் தீவுக்கு போகக் கூடாது என்று தடை இருந்தும் தேவையில்லாமல் போய் சிக்கி உயிரை இழந்துள்ளார் ஜான் என்ற அமெரிக்கர். உலக அளவில் மிக மிக சில பகுதிகளில் மட்டுமே வெளியுலக தொடர்பை விரும்பாத இது போன்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதிலும் பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் ஒரு பகுதியில் ஒரே ஒரு பழங்குடி மனிதர் மட்டும் வசித்து வருகிறார்.
ஒருவர் மட்டுமே வசித்தாலும் கூட இந்த ஒரு மனிதரை பாதுகாக்க பிரேசில் நாட்டு அரசு மிகுந்த அக்கறை எடுத்து வருகிறது. அவர் வசிக்கும் பகுதியில் யாரும் நுழைய முடியாத அளவுக்கு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு எந்த தொந்தரவும் வராத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அந்த பழங்குடி மனிதர், பிற மனிதர்களின் வாடை கூட படாமல் மிகுந்த சுதந்திரமாக நிம்மதியாக வசித்து வருகிறார்.
அமேஸான் காடுகளில் கிட்டத்தட்ட 100 பழங்குடியினர் குழுக்கள் இதுபோல பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அதில் இந்த நபர் மட்டும் தனியாக ஒரு பகுதியில் நடமாடி வருகிறார். இவர் வேறு எங்கும் போவதில்லை. இந்தப் பிராந்தியத்திலேயேதான் இருக்கிறார்.
கடவுளே இது சாத்தான்களின் பூமியாக இருக்கிறதே.. மரணத்திற்கு முன்பு அமெரிக்கர் எழுதிய பரபரப்பு கடிதம்!
கடைசி மனிதர்
இவர் சார்ந்த பழங்குடியினர் பெரும் கூட்டமாக இந்தக் காட்டுப் பகுதியில் முன்பு வசித்து வந்தனர். 70களிலும், 80 களிலும் பிரேசிலில் நடந்த மிகப் பெரிய இன அழிப்பு தாக்குதலில் சிக்கி இவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். மிகக் கொடூரமாக இவர்களை அப்போது இருந்த பிரேசில் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அதில் சிக்கித் தப்பியவர்தான் தற்போது தனியாக வசித்து வருகிறார்.
காட்டுக்குள் குட்டித் தோட்டம்
இவர் வசிக்கும் பகுதியை அத்தனை அருமையாக வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான ஒரே ஒரு குடிசை மட்டுமே போட்டுள்ளார். மற்ற இடங்களை அப்படியே விட்டு வைத்துள்ளார். சின்னதாக ஒரு தோட்டம் வைத்திருக்கிறார். அதில் காய்கறிகள், பழங்களை விளைவிக்கிறார். அது அவரது சாப்பாட்டுக்கு. இதுதவிர காட்டுக்குள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்.
குடிசைக்குள் சுரங்கம்
யாராவது வெளியாட்கள் வருவதாக தெரிந்தால் தனது குடிசைக்குள் கையாலேயே தோண்டி வைத்துள்ள சின்ன சுரங்கத்திற்குள் போய் இவர் மறைந்து கொள்வாராம். இதுவரை யாரையும் இவர் தாக்கியதில்லை. இவரால் வனப்பகுதியில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை என்கிறார்கள். இவருக்கு ஆபத்து வந்து விடாமல் காக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களும் இந்தியர்களே!
இந்த ஆதி மனிதர்களை இந்தியர்கள் என்று பிரேசில் அரசு கூறுகிறது. காரணம், இவர்கள் ஆதி காலத்தில் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். எனவே இவர்களை நேட்டிவ் இந்தியர்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது பிரேசில். இவர்களைக் காக்கவே தேசிய இந்தியர்கள் கழகம் என்ற அமைப்பையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. இவர்கள், அமேஸான் காடுகளில் உள்ள ஆதி குடி மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்புடன்
தற்போது இந்த தனி மனிதன் நிம்மதியாக வாழ காரணம், அவரே ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு வாழியல் நடைமுறைகளும், வெளியிலிருந்து யாரும் உள்ளே ஊடுருவி விடாமல் பாதுகாக்கும் பிரேசில் அரசின் அமைப்புமே முக்கியக் காரணம். வெளியிலிருந்து யாரும் ஊடுருவாமலும், தேவையில்லாமல் அவரது வாழ்க்கைக்குள் புகுந்து குழப்பம் விளைவிக்காமல் இருப்பதாலும்தான் இந்த மனிதர் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வாழ முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் வீடியோ
இந்த மனிதர் உயிருடன் இருக்கிறாரா என்பது சமீபத்தில் சந்தேகமாகி விட்டது. காரணம், இவரது நடமாட்டத்தைக் காண முடியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இவரை பிரேசில் அரசின் இந்திய பழங்குடியினர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சிலர் காண நேரிட்டது. அவர் மரம் வெட்டிக் கொண்டிருந்த காட்சியை வீடியோவில் படமாக்கி வெளியிட்டனர். இதன் மூலம் இந்த பழங்குடியின மனிதர் உயிருடன் இருப்பது ஊர்ஜிதமானது.
தொல்லை பண்ணாதீங்க
இவர்களும் மனிதர்கள்தான். இவர்களுக்கு மொழி, இனம், மதம் என்று எதுவும் கிடையாது. இவர்களுக்கு யாரும் தேவையில்லை. இவர்களே இவர்களைப் பார்த்துக் கொள்வார்கள். உண்மையான இயற்கையின் பிள்ளைகள் இவர்கள். இவர்களைத் தொந்தரவு செய்யும் உரிமை யாருக்கும் இல்லை. அவர்கள் எப்படி இருக்க விரும்புகிறார்களோ அதேபோல வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களை வாழ விடுவோம்.. அவர்களை சீர்திருத்த வேண்டிய அவசியமே இல்லை.. உண்மையில் சீரமைத்துக் கொள்ள வேண்டியது நாகரீகமாக இருப்பதாக கூறிக் கொள்ளும் நம்மைத்தான்!