எம்.ஹெச். 370: ஹனிமூனுக்கு கிளம்பிய தம்பதி- கவலையில் உறவினர்கள்
கோலாலம்பூர்: இந்திய பெருங்கடலுக்குள் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானத்தில் பயணம் செய்த புதுமணத் தம்பதிகளின் குடும்பத்தார் கவலையில் உள்ளனர்.
தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் விமானத்தில் இருந்த 239 பேருமே பலியாகிவிட்டதாக மலேசியா அறிவித்தது. ஆனால் பயணிகளின் உறவினர்களோ அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள்.
இந்நிலையில் விமானத்தில் புதுமணத் தம்பதிகள் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.
தேனிலவு
மலேசியாவை சேர்ந்தவர் முகமது ஷஹ்ரில் ஷாரி. அவரது உறவினர் முகமது ரஸாஹன் ஜமானிக்கும், நோர்லி அக்மர் ஹமீது என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் தேனிலவை கொண்டாட மலேசிய விமானம் எம்.ஹெச்.370 மூலம் சீனாவுக்கு கிளம்பினர்.
விமானம்
தனது உறவினர்கள் குறித்து ஷாரி கூறுகையில், விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. நாங்கள் விமானத்தை பார்க்க விரும்புகிறோம். என் உறவினர் இறந்துவிட்டார் என்றால் அவரது உடலை எங்களிடம் அளிக்க வேண்டும் என்றார்.
முதல் பயணம்
என் உறவினர் ஜமானி முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்காக அவர் பல ஆண்டுகளாக பணம் சேமித்து வந்தார். அவர் சீனாவுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஆனால் இப்படி ஆகிவிட்டது என்றார் ஷாரி.
ஜாலியானவர்
என் உறவினர் ஜமானி மிகவும் ஜாலியானவர். எப்பொழுதும் ஜோக் சொல்லி தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். அவர் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஷாரி தெரிவித்தார்.