கடுமையாக உழைப்பதால் தான் இந்தியர்கள் பாராட்டப்படுகிறார்கள்: கத்தாரில் மோடி பேச்சு
கத்தார்: கடுமையாக உழைப்பதால் தான் இந்தியர்கள் பாராட்டபடுகிறார்கள் என்று கத்தாரில் இந்திய தொழிலாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் முதலில் ஆப்கானிஸ்தானின் ஹீரத் நகருக்கு சென்றடைந்தார். அங்கு இந்தியா சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஹெராத் மாகாணத்தில் ஈரான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சிஸ்ட்- இ- ஷரிப் என்ற இடத்தில் உள்ள சல்மா அணையை திறந்து வைத்தார்.
ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்து கொண்டு பின்னர் பிரதமர் மோடி கத்தார் நாட்டிற்கு சென்றார். தொஹா விமான நிலையத்தில் தரையிறங்கிய அவருக்கு, கத்தார் பிரதமர் அப்துல்லா பின் நாசர் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து தொஹா நகரில் இந்திய மருத்துவ தொழிலாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது: தொஹா நகர் வந்ததும் என்னுடைய முதல் நிகழ்ச்சி உங்களோடு தான். இந்தியாவில் இருந்து வந்துள்ள மருத்துவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்கிறார்கள்.
நம்முடைய மொழியில் யாராவது பேசினால் பாதி தனிமை அதனால் போய்விடுகிறது. இங்குள்ள மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் தனிமை ஒர் நோயாக உள்ளது. அப்போது நம்மை சிலர் நலம் விசாரிக்கும் போது கொஞ்சம் நன்றாக இருக்கிறது.
இந்தியாவை பற்றிய எண்ணங்கள் நம்முடைய தூதரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவாவது இல்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களினால் உருவாகிறது. கடுமையான உழைப்பிற்காக இந்தியர்கள் பாராட்டபடுகிறார்கள். வாழ்க்கையில் மாற்றம் வேண்டி நீங்கள் உழைப்பதை நான் உணர்கிறேன்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக நானும் கடுமையாக உழைக்க தயார இருக்கிறேன். உங்களின் பிரச்சனைகளை நான் அறிவேன். நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை என்னால் பட்டியலிட முடியும். உங்கள் எல்லோர் மீதும் நான் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய தொழிலாளர்கள் மீது மிகுந்த நம்பிக்கையையும், நன்மதிப்பையும் கத்தார் நாடு கொண்டுள்ளது.
பிரதமர் மற்றும் தூதர்களால் மட்டுமே உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு உயரவில்லை. உங்களது பண்புகளும், நல்ல உழைப்பும்தான் இந்தியாவிற்கு நற்பெயரை பெற்று தந்திருக்கிறது. சர்வதேச அளவில் நன்மதிப்பை பெறுவதைஒரு மிகப்பெரிய சொத்தாகவே நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.