பாலஸ்தீன பயணத்தைத் தொடங்கினார் மோடி.. நாளை ரமல்லா செல்கிறார்
அம்மான்: பிரதமர் நரேந்திர மோடி தனது பாலஸ்தீன பயணத்தைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக இன்று அவர் ஜோர்டான் போய்ச் சேர்ந்தார். நாளை பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்குச் செல்கிறார் மோடி.
சுதந்திர பாலஸ்தீன நாட்டிற்கு வருகை தரும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். அதேபோல கடந்த 30 ஆண்டுகளில் ஜோர்டானுக்கு வரும் முதல்வர் பிரதமரும் மோடிதான்.
அம்மான் நகரில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான் நாட்டுப் பிரதமர் ஹனி அல் முல்கி பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார்.
1950 முதல் இந்தியா, ஜோர்டான் இடையே நட்புறவு நிலவி வருகிறது. ஜோர்டான் மன்னர் அப்துல்லாவையும் மோடி சந்திக்கவுள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாலஸ்தீன பயணத்தை மேற்கொள்கிறார். பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், பிரதமர் மோடியை வரவேற்கவுள்ளார்.
தனது பாலஸ்தீனப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபிக்கு செல்கிறார் பிரதமர் மோடி. 10ம் தேதி அங்கு செல்கிறர். அபுதாபிக்கு ஏற்கனவே 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயம் செய்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.