தென் ஆப்பிரிக்க 'கர்நாடக இசைக்கலைஞர்' பாட்ரிக் நகோபோ சிறுநீரக கோளாறால் மரணம்
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞரான பாட்ரிக் நகோபோ சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்தார்.
ஆப்ரிக்காவின் ஜூலு பழங்குடி இனத்தை சேர்ந்த இவருக்கு அவரது வீட்டருகே வசித்த இந்திய நண்பர்கள் மூலம் கர்நாடக இசை அறிமுகமானது. அந்த தெய்வீக இசையில் ஈர்க்கப்பட்ட அவர் தம் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி தென் ஆப்ரிக்காவில் உள்ள கர்நாடக வித்வான் கார்திகேசன் பிள்ளையிடம் கர்நாடக இசை கற்றார்.
தென் ஆப்ரிக்கா வந்த யேசுதாஸ் நகோபோவின் கர்நாடக இசை ஆர்வத்தை பார்த்து அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து சங்கீதம் கற்றுக் கொடுத்தார்.
அதன்பின், தென் ஆப்ரிக்காவில் ஏராளமான கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்றார் நகோபோ. ரேடியோ லோடஸ் என்ற வானொலியில் தமிழ் இசை நிகழ்ச்சியை நடத்தி வந்த ஒரே கறுப்பர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
இவரது மறைவு தென் ஆப்ரிக்க தமிழ் இசை சமூகத்திற்கும், கர்நாடக இசைக்கும் மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.