நெருங்கி வரும் சீனா.. தாலிபான்கள் குழுவின் அதிமுக்கிய சீன பயணம்.. ஆப்கனில் அடுத்து என்ன? பரபர தகவல்
பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், திடீர் பயணமாக ஒன்பது பேரைக் கொண்ட தாலிபான் குழு சீனாவுக்குச் சென்றுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த தாலிபான்கள் குழு, ஆப்கானில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளது.
Recommended Video
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அல்கொய்தா அமைப்பு மீதான தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. இதற்காக ஆப்கன் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் இருந்தன.
அமெரிக்கப் படைகள் இருந்ததால், தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது. ஆனால், கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டன.
மிக விரைவில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி.. சில வாரங்களில் 90% பகுதிகளை கைபற்றிய தாலிபான்.. பரபர தகவல்
தாலிபான்கள்
அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட அதே காலகட்டத்தில் தற்போதைய ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டு தாலிபான்கள் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என அமெரிக்க புலாணய்வு துறை கணித்துள்ளது. தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், போர் நிறுத்தம் குறித்தோ அதிகாரப் பகிர்வு குறித்தோ இதுவரை எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
சீனாவில் தாலிபான்கள்
இந்தச் சூழ்நிலையில், தாலிபான்கள் குழு சீனாவுக்குச் சென்றுள்ளது. இரண்டு நாள் பயணமாக வட சீனாவின் தியான்ஜின் நகருக்கு வந்துள்ள ஒன்பது பேரை உள்ளடக்கிய தாலிபான்கள் குழு, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்தனர். அப்போது மீண்டும் ஆப்கனில் அமைதியான ஒரு சூழலை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் தாலிபான்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனச் சீனா வெளியுறவுத் துறை குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவுத் துறை
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி கூறுகையில், "வரும் காலத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பங்கு முக்கியமானதாக இருக்கும். மேற்கு சீனாவில் உள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் செயல்படும் கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒடுக்கவும் தாலிபான்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் தாலிபான் குழு சீனாவுக்கு சென்றுள்ளது அந்த அமைப்புக்குச் சர்வதேச அங்கீகாரம் எந்தளவு உள்ளது என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. சீன பயணம் குறித்து தாலிபான்கள் கூறுகையில், "அரசியல், பொருளாதாரம், இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை உள்ளிட்டவை குறித்து இதில் முக்கியமாக விவதாகிக்ப்பட்டது. முன்னதாக ஆப்தனுக்கான சீன தூதரைச் சந்தித்து ஆலோசித்தோம். அதன் பிறகு எங்களுக்கு முறையான அழைப்பை அவர்கள் விடுத்தனர். அதன் பின்னரே தற்போது தாலிபான்கள் குழு சீனா சென்றுள்ளது" என்றார்.
அமெரிக்கா கருத்து
இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "ஆப்கனிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தச் சீனா முயல்வதில் எந்த தவறும் இல்லை. சொல்லப்போனால் இது ஒரு நல்ல விஷயம் தான். ஆப்கானில் தாலிபான்கள் தலைமையில் ராணுவத்தை ஆட்சி அமைய வேண்டும் என்பதில் யாருக்கும் ஆர்வம் இல்லை. பேச்சுவார்த்தை மூலமே புதிய அரசு அமைய வேண்டும்" என்றார்.
எல்லையில் தாலிபான்கள்
1996-2001 ஆம் ஆண்டுகளைப் போல இல்லாமல். இந்த முறை எல்லைகளை வலுப்படுத்துவதில் தாலிபான்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளன. முன்னதாக, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆப்கன் பகுதிகளை ஒருபோதும் எந்த நாட்டிற்கும் பயன்படுத்தவிட மாட்டோம் எனத் தாலிபான்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன உதவி தேவை
முன்னதாக, தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் ஆப்கன் மக்கள் மிக்க கடுமையான துன்பத்தை எதிர் கொண்டுள்ளனர். நாட்டை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் மற்றும் அனைத்து நாடுகளின் உதவியும் தேவை. அடுத்து ஆப்கனில் அமையவிருக்கும் அரசு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு களமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று அவர் தெரிவித்தார்.