நிரம்பி வழியும் ஐசியூ படுக்கைகள்.. சுடுகாட்டில் நீண்ட வரிசை.. சீனாவை அலற விடும் புதிய வகை கொரோனா
பீஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. BF.7 வகை மாறுபாடு வைரசே இந்த அதிவேக பரவலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உயிரிழப்புகளை சீனா குறைத்துக் காட்டினாலும் அந்த நாட்டில் உண்மை நிலவரம் வேறுமாதிரியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கொரோனாவை முதன் முதலாக உலகத்திற்கு பரப்பிவிட்ட சீனா, தற்போது கொரோனா சுழலில் சிக்கியிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கொரோனா பரவிய போது தனது கடுமையான ஜீரோ கோவிட் பாலிசி கொண்டு வந்து கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதாக சீனா கூறி வந்தது.
ஒமிக்ரான் வகை கொரோனா
உலக நாடுகளில் எல்லாம் நாள் ஒன்றுக்க்கு பல ஆயிரக்கணக்கில் கொரோனா பரவிவந்த போதும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சில நூறு பாதிப்புகளே பதிவாகி வந்தது. ஆனால்,தற்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பிற நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துவிட்ட நிலையில் சீனாவில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. ஒமிக்ரான் வகை கொரோனாவின் BF.7 வகை மாறுபாடு வைரசே இந்த அதிவேக பரவலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
தடுப்பூசி போட்டு இருந்தாலும் இந்த வகை மாறுபாடு கொரோனா பாதிக்கிறது என்பதே அதிவேக பரவலுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம் சீனா கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சீனாவில் வேகமாக கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. சீனா மட்டும் இன்றி பிரேசில், ஜப்பான், கொரிய நாட்டிற்கும் இந்த ஒமைக்ரானின் புதிய மாறுபாடு வகை கொரோனா பரவியிருப்பதாக தெரிகிறது.
10 லட்சம் பேர் இறக்கக்கூடும்
இந்தியாவில் கூட 4 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. சீனாவில் மட்டும் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீதம் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் 10 லட்சம் பேர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் உலக அளவில் அச்சம் எழுந்துள்ளது. சீனா உடனடியாக தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
நிரம்பி நிரம்பி வழியும் ஐசியூ படுக்கைகள்
ஆனாலும் சீனா தற்போது மாஸ் டெஸ்டிங் எனப்படும் பெரிய அளவிலான கொரோனா பரிசோதனையை கைவிட்டு விட்டது. இதனால், சீனா வெளியிடும் தினசரி கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு நம்பகமானது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால (emergencies) இயக்குநர் மைக் ரையன் கூறுகையில், சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக சொன்னாலும் ஐசியூ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நீண்ட வரிசையில் காத்திருப்பதாக
அதேபோல், உயிரிழந்த உறவினர்களின் உடலை தகனம் செய்வதற்காக தகனமையங்களிலும் பலரும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையும் சீனாவில் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே, பயோன் டெக் பைசர் தடுப்பூசியை சீனாவுக்கு ஜெர்மனி ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. சீனாவில் பைசர் தடுப்பூசி போடப்படவில்லை என்பதால் தூதரகம் மூலமாக பேசி சீனா இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா ஏற்பட்டு உயிரிழந்தாலும்..
இதற்கிடையே, நிமோனியா மற்றும் சுவாச பிரச்சினைகளால் உயிரிழப்பவர்களை மட்டுமே கொரோனா உயிரிழப்புடன் சேர்க்கப் போவதாக சீனா அறிவுறுத்தியுள்ளது. பிற பாதிப்புகள் ஏற்கனவே இருந்தவர்கள் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்தாலும் இந்த இறப்பு கொரோனாவால் இறந்ததாக கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டாது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.