போகோ ஹரம் கடத்திய 200 மாணவிகளை மீட்கும் பணியில் அமெரிக்க ராணுவம்
அபுஜா: போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு கடத்திய நைஜீரிய பள்ளி மாணவிகளை பத்திரமாக மீட்கும் பணியில் அந்நாட்டு அரசுக்கு உதவியாக அமெரிக்க ராணுவமும் களமிறங்கியுள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தின் பள்ளியில் இருந்து 200 சிறுமிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் போகோ ஹரம் தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் ஷேகாவ் வெளியிட்ட வீடியோவில், 'நான்தான் சிறுமிகளை கடத்தி இருக்கிறேன். அவர்களை மார்க்கெட்டில் செக்ஸ் அடிமைகளாக விற்பேன்'என மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.
கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்கும் பணியில் நைஜீரிய அரசுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளன. தற்போது அமெரிக்க ராணுவ வீரர்கள் சுமார் 16 பேர் இது தொடர்பாக நைஜீரியா சென்றுள்ளனர்.
சாமர்த்தியசாலிகள்....
இதற்கிடையே கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர், தங்களது சாமர்த்தியத்தால் அங்கிருந்து தப்பி வந்தனர். நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநில கவர்னரும் கூட கடத்தப்பட்ட சிறுமிகள் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்
கைதிகளுக்கு பதில் மாணவிகள் விடுதலை...
இந்நிலையில், நேற்று அபுபக்கர் ஷேகாவ் 17 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு புதிய வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதில், சிறையில் உள்ள தங்களது இயக்கத்தை உள்ளவர்களை விடுதலை செய்தால், கடத்தப்பட்டுள்ள மாணவிகளை தானும் விடுதலை செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமுக்கு மாற்றம்...
மேலும், போகோ ஹரம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாணவிகள் தலைக்கு முக்காடிட்டு காட்சியளிக்கின்றனர். இது தொடர்பாக அபுபக்கர் கூறுகையில், ‘கடத்தப்பட்ட மாணவிகள் இஸ்லாமுக்கு மாற்றப் பட்டு விட்டதாக' குறிப்பிட்டிருந்தார்.
அரசு மறுப்பு...
ஆனால், போகோ ஹரமின் கோரிக்கையான கைதிகளை விடுவிப்பதற்கு அந்நாட்டு அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
களமிறங்கியது அமெரிக்கா...
மேலும், கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் நைஜீரிய அரசுக்கு உதவியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் 16 பேர் இணைந்துள்ளனர். இத்தகவலை பெண்டகன் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
தேவையான உதவிகள்...
மாணவிகள் கடத்தல் தொடர்பாக அங்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்வது, மேலும், நைஜீரிய அரசுக்கு தேவையான உதவிகளையும், அறிவுரைகளையும் வழங்குவது தான் அமெரிக்க வீரர்களின் முக்கியப் பணி என அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்திடம் ஒப்படைப்பார்கள்...
மேலும், போகோ ஹரமால் கடத்தப்பட்ட மாணவிகளை பத்திரமாக மீட்டு அவர்களது குடும்பத்திடம் ஒப்படைக்கும் பணியையும் அவர்கள் செய்து முடிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
பரிசு...
ஏற்கனவே, தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள சிறுமிகள் இருக்கும் இடம் பற்றியும், தீவிரவாதிகள் பற்றியும் தகவல் அளித்தால் 3 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடத்தப்பட்ட 200 பள்ளி மாணவிகளையும் செயற்கோள் படங்கள் மூலம் தேடுவதற்காக ஐ.எஸ்.ஆர். எனப்படும் கண்காணிப்பு விமானத்தையும் நைஜீரிய அரசின் முன்அனுமதியுடன் அங்கு அனுப்பியிருப்பதாக அதிபர் ஒபாமா அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.