புரியாத புதிராக சீனா.. மீண்டும் புறப்பட்ட கொரோனா வைரஸ்..உலக நாடுகளை நினைத்து சுகாதார நிறுவனம் கவலை
ஜெனீவா: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் உலக நாடுகளை பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் கவலையடைந்துள்ள நிலையில் அந்நாட்டுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரேனா வைரஸ் உருமாறி உருமாறி பல நாடுகளை தாக்கியது. இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலகத்தை இந்த கொரோனா வைரஸ் முடக்கி போட்டுவிட்டது.
பல கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தான் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.

சீனாவில் பரவும் பிஎப் 7 வகை வைரஸ்
இந்நிலையில் தான் மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது வீரியமாக பரவ தொடங்கி உள்ளது. அதன்படி கொரோனாவின் பூர்வீகம் என கூறப்படும் சீனாவில் தான் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 1.48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸ் தான் தற்போது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியாவிலும் பாதிப்பு
இந்த ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், ஒடிசா மாநிலங்களில் தலா 2 பேருக்கு இந்த பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வைரஸ் அமெரிக்கா, பிரிட்டனில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இந்த ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வைரஸ் என்பது சீனாவில் தடுப்பூசி செலுத்தியவர்களை தாக்கி உள்ளது. இதனால் பிற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்து. இதனால் தான் இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் கவலை
இந்நிலையில் தான் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உலக சுகாதார நிறுவனம் கவலையடைந்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது: உலகில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது சில நாடுகளில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. சீனாவில் உள்ள நிலைமை கவலையளிக்கிறது.

விபரங்கள் பகிர...
சீனாவின் கொரோனா பாதிப்பு பற்றிய விபரங்களை பகிர்ந்து ஆய்வுகள் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் சீனா கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது.

முடிவுக்கு வரவில்லை
உலகில் ஓமிக்ரான் அலையின் துவக்கத்தில் பாதிப்பு என்பது அதிகரித்தது. தற்போது ஓமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு, பலியில் இருந்து மீண்டு நாடு சிறந்த நிலையில் உள்ளது. ஏனென்றால் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஏற்பட்ட கொரோனா பலி எண்ணிக்கையை ஒப்பிட்டால் தற்போது 90 சதவீதம் வரை இறப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கூட கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புரிதல் இல்லை
மேலும் நோய் கண்காணிப்பு, சோதனை உள்ளிட்டவற்றில் உள்ள இடைவெளிகளுக்கு மத்தியில் வைரஸ் எவ்வாறு உருமாறுகிறது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளவில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள காலஇடைவெளியில் மில்லியன் கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதையும் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications